இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு விரைவில் ஓட்டுநர் உரிமங்கள்
இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு விரைவில் ஓட்டுநர் உரிமங்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தில் உள்ள பல தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக இத்தாலிய அரசாங்கத்தால் உரிமத்தை அங்கீகரிக்க முடியவில்லை.
இந்தப் பிரச்சினை மோட்டார் போக்குவரத்து பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய அரசுக்கு அடையாளம் காணக்கூடிய வகையில் நாட்டிலிருந்து ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதன் மூலம், தொடர்புடைய தொழில்நுட்பப் பிழைகளைத் தவிர்த்து, இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமம்
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த உரிமம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பிக்கப்பட வேண்டும். 2017 ம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட பிறகு 2022 ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டது.
எனினும் இதுவரை ஓட்டுநர் உரிமத்தைப் பெற இலங்கையர்கள் தவறிவிட்டார் என அமைச்சர் கூறியுள்ளார்.
நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு
2022 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் இலங்கை ஓட்டுநர் உரிமங்கள் செயல்படுத்தப்படவில்லை. எனினும் இது தற்போதைய அரசாங்கத்தின் தவறு அல்ல.
முன்னாள் தூதுவர்களால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2022ஆம் ஆண்டு முதல் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
அதை மீண்டும் பெறுவதற்கு இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் காரணமாக, இத்தாலிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு விரைவில் ஓட்டுநர் உரிமங்கள் வழங்க இணங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
