ஜனாதிபதியுடன் தமிழரசுகட்சியினர் இன்று முக்கிய சந்திப்பு! சாணக்கியன் வெளியிட்ட தகவல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று(19) புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளனர்.
இந்தச் சந்திப்பு இன்று(19) மதியம் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சாணக்கியன் தகவல்
இந்தச் சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி இறுதியாகக் கூட்டிய மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சந்திப்புக்கான நேரம் கோரி ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
பேச்சுக்கான நல்லெண்ண சமிக்ஞையாக வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதில்லை என்றும் அந்தக் கட்சி தீர்மானித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.