வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் இலங்கையில் இயங்கி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது
வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் இலங்கையில் இயங்கி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சில நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் இலங்கையில் தங்கியிருந்த தகவல்களை திரட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதே இந்த புலனாய்வுப் பிரிவின் பிரதான செயற்பாடாக அமைந்துள்ளது என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில வெளிநாட்டு சக்திகள் இலங்கையுடன் பேணும் தொடர்பு, அவற்றின் இராணுவ செயற்பாடுகள், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்பன குறித்து கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையின் அடிப்படையில் பிராந்திய வலயத்தினைச் சேர்ந்த நாடுகளும் ஏனைய நாடுகளும் இவ்வாறான கரிசனையை வெளியிட்டு வருகின்றன.
ராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி புலனாய்வுப் பிரிவினர் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் இயங்கி காலங்களில் இருந்தே வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ராஜதந்திர கடவுச்சீட்டுக்களில் பிரவேசிக்கும் புலனாய்வுவாளர்களை கண்டு பிடிப்பது சிரமமானது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் இவ்வாறு வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.