அமைச்சுப் பதவியை பெறுகிறாரா பசில்? அரசாங்கத்திற்குள் பெரும் முறுகலென தகவல்
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார், பின்னர் ஒரு அமைச்சுப் பதவியைப் பெறுவார் என்ற செய்திகளைத் தொடர்ந்து அரசாங்கத்திற்குள் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு, அரசாங்க கூட்டணிக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர், ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை இதற்கான ஒரு காரணம் என்று குறிப்பிட்டு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன, ஆரம்பத்தில் அவர் நிதியமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியானது, எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதனைத் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
இந்தநிலையில் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் சில நிறுவனங்கள் பசில் ராஜபக்ச பொறுப்பேற்கும் புதிய அமைச்சின் கீழ் மாற்றப்பட வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் பசில் தனது அமைச்சரவை பெறவிருந்த நிலையில், கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கடும் ஆட்சேபனை காரணமாக இந்த நடவடிக்கை தாமதமாகலாம்.
ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் தங்கியிருந்த ராஜபக்ச கடந்த வாரம் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினார்.
அவர் தற்போது பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.