செவிப்புலனற்றோருக்கு விசேட சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு
செவிப்புலனற்றோருக்கான விசேட சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(17) மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு. ஏ. கிருபாகரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் செவிப்புலனற்றவர்களுக்கு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப் பத்திரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விடயமாகும் எனவும், தினமும் பலர் விபத்துக்களினால் காயமடைவதை,மரணமடைவதை நாம் அறிகின்றோம்.

வாகன போக்குவரத்தில் சரியான போக்குவரத்து ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக வாகனம் செலுத்துபவர்கள்கூட சில வேளைகளில் பாரிய விபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆதலால் செவிப்புலனற்றோர் மிகவும் அவதானமாக வாகனம் செலுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், குறிப்பாக அவர்கள் விசேடமாக இலட்சணை பொறிக்கப்பட்ட மேலங்கி மற்றும் தலைக்கவசத்தை நிச்சயமாக அணிந்திருத்தல் வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வாழ்த்து
மேலும், இது தொடர்பாக பொது மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும். ஊடகங்களில் இது தொடர்பாக பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

விசேட தேவை உடையவர் என இனங்காணகூடியதாக இருக்கும் பட்சத்திலேயே அவர்கள் மூலமான இடர்பாடுகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டதுடன், கடந்த வருடம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கியமையினையும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
அத்துடன், செவிப்புலனற்றோர் விசேட சாரதிப்பத்திரம் பெற்றதன் ஊடாக அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள உதவியாக இருக்குமென்று தெரிவித்து, வாழ்க்கை ஒளிமயமாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.