மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரின் நியமனம் தொடர்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பு
மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிக்க, வட மாகாண உள்ளூராட்சி ஆணையர், தேர்தல் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் நீதியரசர்கள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல அடங்கிய இரண்டு நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மன்னார் பிரதேச சபை தவிசாளர் சாஹுல் ஹமீத் முகமது முஜாஹிர், தம்மை, தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் இருந்து, நீக்கும் வட மாகாண ஆளுநரின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த இடைக்கால தடையுத்தரவு மனு மீதே இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், இந்த மனு தொடர்பாக ஒக்டோபர் 27ஆம் திகதி பதில் வழங்குமாறு, வட மாகாண ஆளுநர் உட்பட்ட பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது. மனுதாரரான, சாஹுல் ஹமீத் முகமது முஜாஹிர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரதேச சபைத் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தமது மனுவில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்லஸ், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி கந்தையா அரியநாயகம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகவும் உறுப்பினராகவும், தம்மை மீண்டும், நியமிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுநருக்கு உத்தரவிடுமாறு, தமது மனுவில் கோரியுள்ளார்.
2021, செப்டம்பர் 13, திகதியிட்ட ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பில், வடக்கு மாகாண ஆளுநர், மன்னார் பிரதேச சபையின் தலைவராக இருந்த சாஹுல் ஹமீத் முகமது முஜாஹீரை பதவி நீக்கம் செய்தார். அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட தகுதியற்ற தன்மைக்கு போதுமான ஆதாரம் இருப்பதாக கூறியே இந்த பதவி நீக்கம் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் அறிவித்திருந்தார்.
எனினும்,தம்மை, தவிசாளர் பதவியில் இருந்து நீக்கிய செயற்பாடு, இயற்கை நீதியின் கொள்கையை மீறி எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மன்னார் பிரதேச சபையின் தலைவரானமை, இதுவே முதல் முறை என்பதால், தாம் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
