இலங்கைக்குள் ஒளிந்திருக்கும் அமெரிக்க - இஸ்ரேலிய போர் வீரர்.. இலங்கை அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை!
காஸாவில் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சேதப்படுத்தியதாக கூறப்படும் இஸ்ரேலிய-அமெரிக்க போர் வீரர் ஒருவர் இலங்கையில் மறைந்திருப்பதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
ஜேக் பர்கோன்ஸ் (Jake Burkons) என்ற குறித்த போர் வீரருக்கு எதிராக ஹிந்த் ரஜப் (HRF) அமைப்பு இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது.
(ஹிந்த் ரஜப் அறக்கட்டளை (Hind Rajab Foundation - HRF) என்பது காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட 6 வயது சிறுமி ஹிந்த் ரஜப் என்பவரின் நினைவாக உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச மனித உரிமை அமைப்பாகும்.)
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் (டெக்சாஸ்) இரட்டை குடியுரிமை கொண்ட குறித்த போர் வீரர், இஸ்ரேலிய இராணுவத்தின் 7ஆவது கவசப் பிரிவின் 603ஆவது போர் பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றியவர்.
போர் பொறியியல் படைப்பிரிவு
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து அவர் தன்னார்வத்துடன் இராணுவத்தில் இணைந்து காஸாவில் நிலைகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் அங்கம் வகித்த 603ஆவது படைப்பிரிவானது, காஸாவில் குடியிருப்புப் பகுதிகள், மசூதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் திட்டமிட்டுத் தகர்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹிந்த் ரஜப் அறக்கட்டளை குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையில், 2023 ஒக்டோபர் முதல் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சுமார் 65க்கும் மேற்பட்ட இடிப்பு நடவடிக்கைகளை இந்தப் படைப்பிரிவு மேற்கொண்டுள்ளதாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் சிவில் கட்டடங்களை வெடிபொருட்கள் மூலம் தகர்த்தும் நடவடிக்கைகளில் ஜேக் பர்கோன்ஸ் நேரடியாகப் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தஞ்சம்..
அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், சிவில் கட்டடங்களுக்குள் வெடிமருந்து கம்பிகளை வைத்திருப்பதும், கட்டடங்கள் தகர்க்கப்படுவதும் பதிவாகியுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள் போர்க்குற்றங்களின் கீழ் வருவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தற்போது ஜேக் பர்கோன்ஸ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கையில் தங்கியிருப்பதை ஹிந்த் ரஜப் அறக்கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி, போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் தமது நாட்டில் இருக்கும் பட்சத்தில், அவர்களை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்த் ரஜப் அறக்கட்டளை தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam