மாற்றத்தை ஏற்படுத்தாத டிரம்ப்பின் பயணம்! காஸாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் அரசு முறைப் பயணம், காஸா -இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் கொண்டு வரும் எனவும் காஸாவுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் முடக்கப்படாமல் செல்ல வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் காஸாவின் மீதான தனது தாக்குதலை அதிகரித்துள்ளதினால், அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியதாகவும் டிரம்ப்பின் பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர் தாக்குதல்கள்
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த வியாழக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 300 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று முன்தினம் (15) நள்ளிரவு ஆரம்பமாகிய இஸ்ரேல் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் நேற்று வரை (16) தொடர்ந்து நடைபெற்றுள்ளன.
இந்தத் தாக்குதல்களில், பலியானோரது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 93 ஆக உயர்ந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
டிரம்ப்பின் பயணம்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட அரசு முறைப் பயணங்கள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
அத்துடன், காஸாவிலுள்ள கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சுமார் 150 பகுதிகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதன்மூலம் அங்கிருந்த ஏராளமான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் பெயிட் லஹியா நகரத்தில் நேற்று (16) பல மணி நேரமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியான காணொளிகளில், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் கரும்புகைகள் பரவியுள்ளமையும், அங்குள்ள மக்கள் தங்களது உடைமைகளுடன் நடந்தும், வாகனங்கள் மற்றும் கழுதை வண்டிகள் மூலமாகவும் அங்கிருந்து இடம்பெயர்வது பதிவு செய்யப்பட்டுள்ளன.
