ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாட்டை மீறனால் தாக்குதல்! இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்க ஆதரவுடன் காசாவின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை ஹமாஸ் மதிக்கவில்லையென்றால், மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிக்கப்போவதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது.
அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
பலஸ்தீன கைதிகள்
ஹமாஸ் மேலும் இரண்டு இறந்த பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்த பின்னர், பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸின் அலுவலகத்திலிருந்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் சிறப்பு உபகரணங்கள் இல்லாமல் காசாவின் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டெடுக்க முடியாதுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையிலேயே இஸ்ரேலின் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், பாலஸ்தீன ஹமாஸ் குழு இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2,000 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக 20 உயிருடன் இருந்த பணயக்கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது.
இஸ்ரேலின் எச்சரிக்கை
அத்துடன் தமது தடுப்பில் இறந்ததாக கூறப்படும் 28 பணயக்கைதிகளில் 9 பேரின் உடலங்களை இதுவரை ஒப்படைத்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் தனது காவலில் இருந்த மேலும் 45 பலஸ்தீன உடல்களை தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு மாற்றியது, இதன் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட உடல்களில் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் திட்டத்தின் கீழ், இறந்த ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் பதிலாக 15 பலஸ்தீன இறந்தவர்களை இஸ்ரேல் திருப்பியனுப்புகிறது.