காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்
இன்று முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த தனிமைப்படுத்தல் முடக்கம் தொடர்ந்து 5 நாட்களுக்கு அமுலில் இருக்குமென மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முழுநாளும் மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 549 றிபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற் கொள்ளப்பட்ட 665 றிபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்விரு பிரதேசங்களிலுமாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 50 நபர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 9 நபர்களும் உள்ளடங்குகின்றனர்.
இத்தொற்றாளர்களும் இவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்களையும் இனங்கண்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால் குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







