அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் (PHOTOS)
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமான அரசாங்கத்தை பதவி விலக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் பல இடங்களில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை
திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கபில களுப்பானவின் தலைமையில் திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் இன்று (7) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.
கோட்டாபய நாட்டை விட்டு போ, மக்களை ஏமாற்றாதா, பதுக்கிய மக்களின் சொத்துக்ளை ஒப்படை போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியிருந்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையினால் திருகோணமலை கொழும்பு பிரதான போக்குவரத்து சில மணி நேரங்கள் தடைப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார்,
மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (7) மதியம் 1 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தின் முன் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது 'கவிழ்ப்போம் கவிழ்ப்போம் குடும்ப ஆட்சியை கவிழ்ப்போம்' , அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீரழித்தது போதும் ஓடிவிடு கோட்டா, போலி முகம் காட்டும் கோட்ட அரசு எமக்கு வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு மன்னார் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மன்னார் பகுதியில் 'தந்தையே எமது தேசத்தை விழித்தெழச் செய்வீர்' என்னும் கருப்பொருளில் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் இன்று(07) காலை 10 மணியளவில் அமைதிப் பவனியும் தேச விழிப்புணர்வுக்கான சர்வமத வழி பாடும் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு நகரிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, எரிவாயு பற்றாக்குறை என்பனவற்றை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் (07) இன்று காலை மாவட்ட செயலத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய மக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்டவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு நகர் பகுதியில் காலை 10.00 மணிக்கு பயங்கரவாத தடைச்சடட்டத்தினை உடன் நிறுத்துமாறு கோரியும் எமக்குத்தேவை கௌரவம்,சமத்துவம் மற்றும் சனநாயகம் என்பனவற்றை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ மயமாக்கல் ஆகியவற்றை நிறுத்துமாறு கோரி அரசுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்க முன்பாக இன்று(07) காலை ஜக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் லக்ஷயன் முத்துக்குமாரசாமி, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகஜன் ஆகியோரின் பங்கு பற்றலுடன் மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பதாதைகளை தாங்கியவாறு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு அருகில் இருந்து பிரதேச செயலகம் வாசல் வரை வந்து தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.கையில் குழந்தைகளை ஏந்தியவாறு கோத்த நாட்டைவிட்டு வெளியேறு கேட்ட வேண்டாம், மகிந்தவேண்டாம், பசில் வேண்டாம் போன்ற கோசங்களை எழுப்பி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், பிள்ளைகளுக்கான மா இல்லை, சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, பெற்றோல் இல்லை, வயல் வேலை செய்யமுடியாத நிலை, எல்லாத்திற்கும் விலை ஏற்றம் இந்த ஜனாதிபதி வேண்டாம் இனிவரும் சந்ததி சுதந்திரமாக நல்லாக வாழ வேண்டும்.இன்று எத்தினை வீட்டில் சாப்பாடு இல்லை என்று ஜனாதிபதிக்கு தெரியாது என்று மக்கள் உரக்க குரல் கொடுத்து ஜனாதிபதிக்கான எதிர்ப்பினையும் அரசாங்கத்திற்கான எதிர்ப்பினையும்; தங்கள் ஆதங்கத்தினை கத்தியும் எழுத்து பதாகைகளை தாங்கியவாறும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கிளிநொச்சி
ஐக்கிய மக்கள் சக்தியிகன் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, ஏ9 வீதி வழியாக டிப்போ சந்திவரை சென்ற போராட்டக்காரர்கள் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு தெரிவித்து கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தது. குறி்த்த போராட்டத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் வைத்தியர் விஜயராஜன், மாவட்ட அமைப்பாளர்களான மரியசீலன், ரஞ்சன் ஆகியோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.
சம்மாந்துறை
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்றாவது நாளாக ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தலைமையில் இன்று(07) இரவும் தீப்பந்தங்களை கையில் ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், விவசாய அமைப்புக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, பச்சிளம் குழந்தைகளை கொன்ற கோத்தாவே வெளியேறு, நாட்டில் எதுவுமில்லை மக்களுக்கு பசி, பசளை தா, பெற்றோல் தா, மொட்டின் முட்டுக்கள் வெளியேறுங்கள், கோத்தா நாட்டை விட்டு வெளியேரு, அடுத்து இறக்கப்போவது போவது யார், ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி, பசிலே வெளியேறு, அரசே வீட்ட போ, போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சம்மாந்துரை பொதுசந்தையிலிருந்து ஆரம்பித்து ஹிஜ்ரா சந்திவரை சென்ற
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை
கட்டுப்படுத்தும் வேலைகளை சம்மாந்துறை பொலிஸார் துரிதகெதியில்
மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தமையையும் காண
முடிந்தது.
வவுனியா
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது இன்று (07) பிற்பகல் வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரார்கள் ' கோட்டபாய வீட்டுக்கு செல்லுங்கள், அரசாங்கமே உடனடியாக பதவி விலகு, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கொடு' என பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டமானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பழைய பேருந்து நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடைந்ததுடன், பழைய பேரூந்து நிலையம் முன்பாக ஏ9 வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 30 நிமிடங்கள் ஏ9 வீதியூடனான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மதகுருமார், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.