நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் (PHOTOS)
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் இன்றைய தினம் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டியும் மாவீரர் தினத்தினை உணர்வுபூர்வமாக தாயக உறவுகள் அனுஷ்டித்து வருகின்றனர்.
அந்த வகையில், பொதுமக்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பலர் தமது அஞ்சலியினை செலுத்தி வருகின்றனர்.அவை தொடர்பான தொகுப்பு பின்வருமாறு,
வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தனது இல்லத்திற்கு முன்பாக இன்று தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று சனிக்கிழமை மாவீரர் தின அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது மாலை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இன்றைய மாவீரர் தின அனுஸ்டிப்பு வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பல தடையுத்தரவுகள் மற்றும் கெடுபிடிகள் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி இன்றைய மாவீரர் தின நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் தவராசா கலையரசன் மிக எளிமையாகவும், உணர்வு பூர்வமாகவும் அனுஸ்டித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவம் பொலிஸாரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்கரை பிரதேசம் , முல்லைத்தீவு தேவிபுரம் துயிலும் இல்லம் , வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லம் , ஆகிய துயிலும் இல்லங்களில் இராணுவம் பொலிஸாரின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு 06.05 மணிக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.