இஷாரா செவ்வந்தி தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்
கணேமுல்லை சஞ்சீவ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற வகையில் பரவும் தகவல்கள் குறித்து கருத்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை எண் 5 நீதிமன்ற சாட்சிக் கூண்டில் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்றே இதுவரை நம்பப்படுகின்றது.
வெளியேறுவதற்கான வழிகள்
'குற்றம் நடந்த கடந்த மாதம் 19 ஆம் திகதி முதல் சில மணி நேரங்களுக்குள் குறித்த சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளும் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தடை செய்யப்பட்டிருந்தன.

அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.' புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவம் நிகழும்போது, பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன.
விசாரணைகளைத் திசைதிருப்ப குற்றவாளிகள் இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது சாத்தியமாகும். ஆனாலும் இஷாரா செவ்வந்தி மறைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து அவரைக் கைது செய்ய புலனாய்வுக் குழுக்கள் இன்னும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் புத்திக மனதுங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri