இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..!
சீனாவிடம் இந்து சமுத்திரம் வீழ்வதை தடுக்க உக்ரைனில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
உக்ரைன் யுத்தமானது ஒற்றைப் பொருளியல் தளத்தில் இரட்டை அதிகார மையங்களின் ஆடுகளமாக அமைந்துவிட்டது.
உலக ஒழுங்கை (World order) தீர்மானிக்கும் சக்தியை சீனா பெறும் வரைக்கும் உக்ரைனில் பதிலாள் யுத்தமாக சண்டை தொடர்வதை சீன விரும்புகிறது. அதனை ஐரோப்பிய தலைவர்களும் விரும்புகின்றனர்.
இவர்களுக்கு உலகம் தழுவிய அரசியல் (Global Political Interests) இப்போது முக்கியமல்ல. ஆனால் அமெரிக்காவின் தேசியநலன் என்பது அதனது உலகம் தழுவிய அரசியல்தான். அதுவே சீனாவின் நிலைப்பாடாகும்.
ரஷ்யாவின் பாதுகாப்பு
ஏனைய நாடுகளுக்கு புவிசார் அரசியலே (Geopolitics) முதன்மைவாய்ந்த தேசிய நலனாக கருதுகின்றன.
இன்று சர்வதேச அரசியல் ஆளுகை விவகாரங்களில் Location based warfare மற்றும் Location war என்ற சொல்லாடல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இவை பற்றிய சரியான புரிதல் நமக்கு தேவை. கடந்த மூன்று ஆண்டுகளாக புவிசார் அரசியல் பாதுகாப்பு யுத்தமாகவே ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனில் போரை நடாத்தியது.
இந்தப் போரை “புவிசார் அரசியல் மூலோபாயம்”(Geopolitical Strategy) என்ற கோட்பாடு அடிப்படையில் புரியப்படவேண்டும். ”Location-based warfare” என்பது குறிப்பிட்ட பிரதேசத்தின் புவியியல் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பிரதேசத்திற்கு பொருத்தமாக கையாளப்படக்கூடிய போர் முறைமையாகும்.
குறிப்பிட்ட அந்த இடத்தின் புவியியல் அமைவிட, அரசியல், தேசிய பாதுகாப்பு, இயற்கைவள மற்றும் மூலதன காரணிகள் போரை தீர்மானிக்கின்றன.
இந்த அடிப்படையிற்தான் ரஷ்யா தனது நாட்டின் அரசியல் எல்லைக்கு அப்பால் தனது பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் உக்ரைன் தனது எதிர் சக்கதிகளுடன் கூட்டுச்சேர்வதை தடுக்கவே போரிடுகிறது.
இதனை Location war என்பர். அதாவது புவியியல் அமைவிடம் சார்ந்து ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உக்ரைன் நேட்டோ அணியில் இணைவதை தடுக்கவேண்டும். அதற்காக ரஷ்யா போர்ரை நடத்தியே தீரும். இது புட்டின் நடாத்தும் யுத்தமல்ல, ரஷ்சிய நாடு ரஷ்யர்களின் கையில் இருக்க வேண்டுமானால் அவர்களுக்கு இந்த யுத்தம் தவிர்க்க முடியாது.
உக்ரையின் ரஷ்யாவுடன் இயைந்து செல்வது அதனுடைய அமைவிடம் சார்ந்த தலைவிதி, அல்லது அமைவிட(location) நியதி என்பதே பொருத்தமானது.
இப்போது ரஷ்யா தனது location Warல் வெற்றிபெற்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அது அவர்களுக்கான இயற்கையின் கொடை. ஆகவே, “Location-based warfare” என்ற போரியல் முறைமையின் கீழ் ரஷ்யாவை general winter எப்போதும் பாதுகாக்கும்.
NATO அமைப்பில் இணையும் முயற்சி
“General Winter” என்பது ரஷ்யாவின் கடுமையான குளிர்காலத்தை ஒரு போர்க் தந்திரமாக எடுத்துக்காட்டும் சொற்றொடர். இது ரஷ்யாவிற்குள் அண்டை நாடுகள் படையெடுத்த காலங்களில் எதிரி படைகளுக்கு மிகப்பெரிய தடையாக இருந்து எதிரிக்கு தோல்வியை பரிசளித்துள்ளது.
எனவே புவிசார் அரசியலில் அவரவர் பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள இட அமைவு யுத்தங்கள் (Location war) தவிர்க்க முடியாதவை. அந்த அடிப்படையிற்தான் 2014ல், ரஷ்யா உக்ரைனின் கிரிமியா பகுதியை கைப்பற்றியது,
அதே ஆண்டு டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு பிரிவு குழுக்கள் போரிடத் தொடங்கின. அங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் ரஷ்ய மொழிப் பேசுவோர். ஆதலால் அவர்கள் ரஷ்யா ஆதரவான மக்களாக உள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு 2014ல் நடந்த மக்கள் கருத்து கணிப்பு வாக்கெடுப்பின் (Referendum) மூலம் கிரிமிய மக்கள் பெரும்பாலானோர் 97% ரஷ்யாவுடன் இணைவதற்கு ஒப்புக்கொண்டதாக ரஷ்யா தெரிவித்தது.
ஆனால் மேற்கத்திய நாடுகள் இதை ஏற்கவில்லை என்பது வேறுவிடயம். இவ்வாறு கிருமிய பகுதியை ரஷ்யா தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்ததன் வெளிப்பாடு உக்ரைன் NATO அமைப்பில் இணையும் முயற்சிகளை துரிதப்படுத்தியது.
NATO எனப்படுவது North Atlantic Treaty Organization இதனை சுருக்கமாக NATO என்பர். இந்த வட அத்திலாந்திக் உடன்படிக்கை அமைப்பு என்பது ஒரு பாதுகாப்பு கூட்டமைப்பு (Collective Security Alliance) என்று கூறிக் கொண்டாலும் இது 1949ல் அமெரிக்கா, கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளால் சோவியத் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ராணுவ கூட்டணி அமைப்பாகும்.
இதன் முக்கிய நோக்கம் உறுப்பு நாடு ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் அது உறுப்புநாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்பட்டு இந்த அணி எதிர்த்தாக்குதலை நடத்தும் என்பதாகும்.
இந்த அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் முனையக் கூடாது என்றும் அவ்வாறு இணைய மாட்டோம் என உத்தரவாதம் தராவிட்டால் தம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா அறிவித்து இருந்தது மாத்திரமல்ல உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யப்படைகள் குவிக்கப்பட்டன.
பொருளாதார மற்றும் சக்திவள ரீதியில்..
இதனையும் மீறித்தான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டார். இதனாலேயே ரஷ்யா முழுமையான போரை 2022 பிப்ரவரி 24 தொடங்கியது.
இந்தப் போருக்கு எதிராக முழு ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனின் பக்கம் நின்றன. அமெரிக்காவும் இந்த போரில் பெரும்பங்கை வகித்தது.
இந்தப் போரை அமெரிக்காதான் பின்நின்று நடத்தியது என்று சொல்வதே பொருத்தமானது. கிரிமியாவை (Crimea) ரஷ்யா கைப்பற்றியதற்கான புவிசார் அரசியல் (Geopolitical) காரணங்கள் பல. ரஷ்யாவிற்கு கருங்கடல் பாதுகாப்பு மூலோபாய முக்கியத்துவம் என்ற வகையில் கருங்கடலில் முக்கிய கடற்படை தளம் (Sevastopol Naval Base) ரஷ்யாவின் கடற்படை செயல்பட உதவுகிறது மாத்திரமல்ல மத்தியதரை கடல் வழியான கடற்போக்குவரத்து, பாதுகாப்பிற்கு ரஷ்யாவிற்கு அந்தப் பகுதி இன்றியமையாதது.
பொருளாதார மற்றும் சக்திவள ரீதியில் கிரிமியாவின் கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு போன்ற வளங்கள் உள்ளன. கருங்கடல் பாதை வழியாக ரஷ்யாவின் சக்திவளம் (எரிவாயு, எண்ணெய்) ஏற்றுமதி வணிகம் தங்கியுள்ளது என்பதனால் கருங்கடல் அமைவிடம் சார்ந்து ரஷ்யாவுக்கு தேவையாக உள்ளது.
நேட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் இணைந்தால் நேட்டோவின் ராணுவ தளங்கள் ரஷ்யாவின் கால்மாட்டுக்குள் வந்துவிடும். ரஷ்யாவின் பாதுகாப்பு எல்லைக்குள் எதிரணியின் ராணுவ தளங்களும், தளவாடங்களும் நிலை கொள்வது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
எனவே தனது புவிசார் அரசியல் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்புகிறது. வரலாற்று மற்றும் கலாசார, குடியேற்ற அதாவது அரசியல் புவியியல் (Political Geography) ரீதியாக ரஷ்யா-உக்ரைன் உறவு என்பது கிரிமியா 1783ம் ஆண்டு முதல் சோவியத் யூனியன் காலம் வரை ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்தது.
1954ல், நிகிதா குருஷ்சேவ் (Nikita Khrushchev) அதை உக்ரைனுடன் இணைத்தார். எனவே கிருமியாக ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே ரஷ்யர்கள் இன்று கருதுகிறார்கள்.
கிழக்க ஐரோப்பாவில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நேட்டோ, யூரோ (NATO, EU) செல்வாக்கு அதிகரிப்பு என்பது ரஷ்யாவின் புவிசார் அரசியல் நலனுக்கு பாதிப்பாகவே அமையும்.
இந்நிலையில் 2013-14ல் உக்ரைனில் நடந்த Euromaidan புரட்சியால் ரஷ்ய ஆதரவாளரான ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் (Viktor Yanukovych) பதவி நீக்கப்பட்டார்.
இதன் பின்னர் உக்ரைன் மேற்கு நாடுகளுடன் அதாவது நேட்டோ, யூரோ (EU, NATO) நெருக்கம் காட்டியது. உக்ரைன் மேற்கு நாடுகளுடன் இணைவதை தடுக்க ரஷ்யா பேசிப்பார்த்தது பயனில்லை என்றநிலையிலேயே உக்ரைன் மீது போரை ஆரம்பித்தது.
ஆகவே தனது புவிசார் அரசியல் நலனை உறுதிப்படுத்த 2014ல் ரஷ்யா கிரிமியாவை தனது பகுதியாக இணைத்துக்கொண்டது. ஆனால், ஐக்கிய நாடுகள் அவையும், மேற்கத்திய நாடுகளும் இதை சட்டவிரோதமான ஆக்கிரமிப்பாகவே அறிவித்தன.
இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தன. இந்தப் பொருளாதாரத் தடைக்கு ரஷ்யா பணியவில்லை. அது பணிய வேண்டிய தேவையும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
பென்டகன் எடுத்த முடிவு
ஏனெனில் மேற்குலகம் ரஷ்யாவில் இருந்து மூலப்பொருட்களை பெறுகின்றன. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எண்ணெய், எரிவாயுவை பெறுவதனால் அவை அந்த நாடுகளுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ளன.
அத்தோடு ரஷ்யாவின் உயர் தொழில்நுட்ப வல்லமை அதனுடைய உள்நாட்டு நுகர்வு உற்பத்தியை விரைவாக அதிகரிக்க செய்துவிட்டது. ஆகவே உள்நாட்டு நுகர் உற்பத்தியில் ரஷ்யா தன்நிறைவுடன் உள்ளது.
ஏற்றுமதி நோக்கிய உற்பத்தி என்பது உயர் தொழில்நுட்பம் என்ற வகையில் அணுவாராய்ச்சி, விண்கல தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, ஏவுகணை, விமானம் என்பன உயர் நிலையில் இருப்பதனால் அவற்றின் தேவை பலம் வாய்ந்த நாடுகளுக்கு அவசியமாகிறது.
ஆகவே தனது நாட்டுக்குள் தனக்கு தேவையான மூல வளங்களை கொண்டுள்ள ரஷ்யா உள்நாட்டு நுகர் உற்பத்தியிலும் தன்னிறைவு அடைந்திருப்பதனால் உலகின் எந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தாலும் ரஷ்யா தொடர்ந்து தன்னை தனித்து இயங்கக்கூடிய வல்லமையையும், தகுதியையும் பெற்றிருக்கின்றது.
எனவே பொருளாதாரம் தடை என்பது ரஷ்யாவை பொறுத்த அளவில் எந்த தாக்கத்தையும் விளைவிக்காது. மாறாக பொருளாதாரத்தடை விதித்தவர்களுக்கே அது பெரும் தாக்கத்தை செலுத்த வல்லதாக மாறியுள்ளது.
இப்போது அமெரிக்காவுக்கு கிழக்கு ஐரோப்பிய புவிசார் அரசியல் யுத்தத்தை விட இந்து சமுத்திர பிராந்திய ஆளுகை முக்கியமானது. உலக ஒழுங்கை தீர்மானிக்கு கேந்திரஸ்த்தானமாக, தாய்க்கடலாக இந்துசமுத்திரம் இருப்பதனால் இப்போது உக்ரைன் யுத்தத்தில் இருந்து அமெரிக்கா பின்வாங்க முடிவெடுத்து விட்டது.
இந்த முடிவு வெறுமனே ட்ரம்ப“ என்கின்ற அமெரிக்க ஜனாதிபதியின் முடிவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் எடுத்த முடிவு.
இது அமெரிக்க உளவு நிறுவனங்களின் முடிவு. அந்த முடிவை ட்ரம்ப் அறிவித்திருக்கிறார் இவ்வளவுதான். இங்கே அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் யார் வென்று இருந்தாலும் இந்த முடிவைத்தான் அந்த ஜனாதிபதி அறிவித்திருப்பார்.
இப்போது ட்ரம்ப் வென்று இருக்கிறார் ஆகவே அவர் அந்த முடிவை அறிவித்தார். இந்த முடிவிற்கான காரணங்கள் பற்றியும் சற்று பார்க்கப்பட வேண்டும்.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னர் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான ஒற்றை மைய உலக அரசியல் நிலைபெற்றிருந்தது. ஆனாலும் 2020 கோவிட் பேரிடரின் பின்னர் ஒற்றைப் பொருளாதாரதளத்தில் இரண்டு அதிகாரம் மையங்கள் தோன்றி விட்டன.
அது ஒரு பக்கம் அமெரிக்காவின் தலைமையிலும், மறுபக்கம் சீனாவின் தலைமையிலும் இரண்டு அதிகார மையங்கள் இன்றைய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்து விட்டன.
இந்த நிலையிற்தான் உக்ரைன் போர் ஒரு பதிலாள் யுத்தமாக நடத்தப்பட்டது. இந்த யுத்தம் ஒரு தவறான தருணத்தில் தொடங்கப்பட்டு விட்டது மாத்திரமல்ல அது ஒரு நீண்ட காலத்திற்கு நீண்டு செல்வதை சீனா விரும்புகிறது.
சீனாவின் நீண்டகால கனவான புதிய பட்டுப்பாதை
சீனாவின் நீண்டகால கனவான புதிய பட்டுப்பாதை (New Skill Route) வியூகத்திற்கும் உக்ரைன் போர் தொடர்ந்து நீண்டு செல்வது அவசியமாகிறது. ஆனால் இத்தகைய சீனாவின் விருப்பை யுத்தம் ஆரம்பித்ததன் பிற்பாடுதான் அமெரிக்க உளவு நிறுவனங்கள் மோப்பம் பிடித்து கண்டுபிடித்தன.
சீனா இந்து சமுத்திரத்தில் தன்னை நிலை நிறுத்தினால் மாத்திரமே அதனுடைய புதிய பட்டுப்பாதை வியூகம் வெற்றி பெறும்.
புதிய பட்டுப்பாதை யூகத்தை முறியடிப்பதற்கு இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது செல்வாக்கை நிலை நாட்ட வேண்டும்.
ஆகவே இப்போது எழுந்திருக்கும் நெருக்கடி இந்து சமுத்திரத்தை பாதுகாப்பதா? அதாவது இந்து சமுத்திரத்தை பாதுகாப்பதன் மூலம் உலகளாவிய அரசியலில் தன்னை தொடர்ந்து தக்கவைப்பதா, அல்லது புவிசார் அரசியல் என்ற ரீதியில் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதா? என்ற நிலையில் அமெரிக்கா தனது உலகளாவிய அரசியல் ஒழுங்கையும், பாதுகாப்பையும் தீர்மானிக்கும் சக்தியாக தன்னை நிலை நிறுத்துவதற்கு முதலில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அதற்கு அது உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டியது தவிர்க்க முடியாத நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இப்போது ரஷ்யா உலகளாவிய அரசியல் நிலையை விடுத்து தனது பிராந்திய அரசியலை அதாவது புவிசார் அரசியலை பாதுகாப்பதையே தனது தலையாய நோக்காகக் கொண்டு செயல்படுகிறது.
உலகளாவிய அரசியலில் இப்போது பெரிய அளவு கவனம் செலுத்த விரும்பவில்லை. அது தனது புவிசார் அரசியல் நலன்களோடு தன்னை மட்டுப்பட மட்டுப்படுத்திக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளவே விரும்புகிறது
ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தளவில் அது தனது உலகளாவிய அரசியலை உலக ஒழுங்கை தீர்மானம் சக்தியாக தான் இருப்பதனையே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. அவ்வாறே சீனாவும் உலகளாவிய அரசியலை மையப்படுத்தி செயற்படுகிறது.
இந்த அடிப்படையிற்தான் இப்போது அமெரிக்கா உக்ரைன் போரில் இருந்து தன்னை விளக்கிக் கொள்கிறது. அது குவாட் அமைப்பின் ஊடாக இந்துசமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை தன்கையில் எடுப்பதோடு தன்னை உலக ஒழுங்கின் நடுநாயகமாக நிலநிறுத்தவும், சீனாவை மேற்கு ஆசியாவுக்குள் முடக்குவதற்கான மூலோபாயமாகவுமோ இப்போது இந்து சமுத்திரத்தை நோக்கி அமெரிக்கா தனது முழு சக்தியையும் பிரயோகிக்க முனைகிறது.
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கா எடுக்கின்ற நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர்களின் வாழ்நிலத்தின் அமைவிடம் என்றும் இல்லாத அளவு முக்கியத்துவத்தை இப்போது பெறுகின்றது.
அந்த புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை ஈழத் தமிழர்கள் சரிவரப் புரிந்து கொண்டு தம்மை எந்த அணியில் சேர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு வருவதே ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான வழியை திறக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 09 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.