பௌத்தர்கள் இல்லாத வடமுனை நெடியகல்மலையிலும் பௌத்தாலயமா? ஜி.ஸ்ரீநேசன்
“பௌத்தர்கள் இல்லாத வடமுனை நெடியகல்மலையிலும் பெளத்தாலயம் அமைக்கப்படவுள்ளது, அப்படியென்றால் பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது” என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுபினர் ஜி.ஸ்ரீநேசன் (G. Sreeneshan) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களாகவும் பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலும் வடமுனை, ஊத்துச்சேனைக் கிராமங்கள் உள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பேரினவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பல தமிழ் மக்கள் 1958,1983களில் இங்கு குடியேறியுள்ளனர்.
மேளை வந்தாறுமூலை, மண்டூர், மலையக்க்கிராமங்கள் சார்ந்த மக்களும் விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என்ற தொழில் அடிப்படையில் இங்கு குடியேறியுள்ளனர்.
இந்த மக்களின் குடியேற்ற விடயத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் (Manikkavasan), பொறியியலாளர் மரியசிங்கம் (Mariyasingam) போன்றவர்கள் பக்க துணையாக இருந்துள்ளார்கள்.
அதே வேளை அத்துமீறிய பெரும்பான்மை இத்தவரின் குடியேற்றத்தை அகற்றுவதில் முன்னாள் அமைச்சர் தேவநாயகமும் (Thevanayagam) ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
இன்றைய நிலையில் வடமுனை, ஊத்துச்சேனை மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வடமுனையில் இருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள நெடியகல் மலையில் பெளத்தாலயம் ஒன்றை அமைப்பதற்குக் கிழக்குமாகாண ஆளுனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எத்தனையோ வீதி அபிவிருத்தித் திணைக்கள வீதிகள் உடைந்து சிதைந்து கிடக்க காட்டின் ஊடாக நெளு மலைக்காக புதிய 5 கி.மீ வீதியானது வீதி அபிவிருத்தித் திணைக்களம் மூலமாக அமைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பெளத்தாலயம் அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால் பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது.
பொலன்னறுவை மாவட்ட சொறுவில், கறுப்பளை, முத்துக்கல், மன்னம்பிட்டி, வெலிக்கந்த போன்ற கிராமங்களில் இருந்து உயிர் இழப்புகள், சொத்திழப்புகள் மத்தியில் வடமுனை ஊத்துச்சேனையில் குடியேறிய மக்களை நோக்கி மேலுமொரு பெரும்பான்மையினக் குடியேற்றம் துரத்தி வருவது போல் தெரிகிறது.
பிக்குகள், தொல்லியலாளர்கள், ஆளுனர் தரப்பினர், ஆர்.டி.டியினர் அங்கு அடிக்கடி பிரசன்னமாகி வருகின்றனர். மயிலத்தமடு, மாதவணை, காரமுனை, நெளுக்கல் மலை என்று மட்டக்களப்பு மண்ணை ஆக்கிறமிப்பதற்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ந்தும் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கின்றன.
வியத்மக அமைப்பு சார்ந்தவர்கள் ஓரின சிங்கள மக்களை மாத்திரம் திருப்திப்படுத்தினால் அடுத்த தேர்தலிலிலும் பொதுஜனப்பெரமுனக் கட்சியை வெல்லச்செய்து விடலாம் என்ற மனப்பாங்குடன் செயற்படுகின்றனர்.
அதேவேளை அரணகம்விலயில் இருந்து 23 கி.மீ வீதி மயிலத்தமடு, புலிபாஞ்சகல் நோக்கி வீதி அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அமைக்கப்படுகிறது. எல்லாம் பெரும்பான்மை சமூகக்குடியேற்ற மையமானதாக உள்ளதாகவே அறியமுடிகிறது.
தொல்லியலாளர்களும், வியத்மக அமைப்பினரும் தமிழ் பேசும் மக்களைத் தொல்லைப்படுத்துவதென்றே சபதம் எடுத்துவிட்டார்கள் போல் தெரிகிறது.
இப்படியான நிலையில் பொதுசனப் பெரமுனக் கட்சியிடம் உள்நாட்டுப் பிரச்சினைகளை அதிகரிப்பதற்கான பொறிமுறைகள் இருக்கின்றனவேயொழிய, உள்நாட்டுப் பிரிச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்தப் பொறிமுறையும் இல்லை.
இவற்றைவிட வடமுனைக்குளம், மீராண்டவில், காடுகள் தோறும் மண்ணகழ்வுகள் பாரியளவில் நடைபெறுகின்றன. தடுக்க வேண்டிய ஆளுங்கட்சித் தமிழ் அரசியல்வாதிகளும் மண்ணகழ்வு வியாபாரத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
இவர்கள் தமது ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு மண் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுத்து வருவாய்களில் பங்காளிகளாக உள்ளனர்.
மண்ணகழர்களில் பொலன்னறுவை மாவட்டத்தவர்கள் 75% உம், மட்டக்களப்பு மாவட்டத்தவர்கள் 25% அளவிலும் மண் வியாபாரம் செய்கின்றனர்.
மட்டக்களப்பு வளத்தை அழித்தாவது கோடீஸ்வரர்களாக மாற வேண்டும் என்ற இலக்குடன் அதிகார அரசியல் புள்ளியர்கள் செயற்படுகின்றனர். ஆனால் உள்ளூரில் உள்ளவர்கள் உழவியந்திரம் மூலமாகக்கூடத் தேவைகளுக்கு மண்ணைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றை விடவும் வடமுனை ஊத்துச்சேனை மக்களில் கணிசமானவர்கள் விவசாயிகளாவர். அவர்களது விவசாய நிலங்கள் பல ஏக்கர்கள் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் தமது பற்றைகள் மண்டியுள்ள விவசாய நிலங்களை அகற்றச் சென்றால் அங்கு வனவள அதிகாரிகள் இடையூறுகள் விளைவிக்கின்றனர், கைது செய்கின்றனர்.
ஆனால் வசதி படைத்தவர்கள் கனரகவாகனங்களால் காடுகளைத் தள்ளுகின்ற போது கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மேலும் இக்கிராம மக்களால் வழிபட்டு வந்த வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமான வயல் காணி 21 ஏக்கர்கள் தனிப்பட்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை, யானைகளின் தொல்லை, போக்குவரத்து வசதி இன்மை, பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரம்-11 வரை கற்பதற்கான பாடசாலைகள் இல்லாமை, தினசரி இயங்கக்கூடிய வைத்தியசாலை இல்லாமை, விசஜந்துகளினால் உயிராபத்து போன்ற பல தொல்லைகளுடன் எல்லைப்புற மக்கள் போராடி வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் இம்மக்கள் மீது அக்கறை காட்டுவது மிகக் குறைவு என்ற கருத்தினை அம்மக்கள் கொண்டுள்ளார்கள்.
அதேவேளை ஊற்றுச்சேனைக் கிராமத்தில் இருந்து சிறுவர்கள் சிறுமிகள் ஊழியமாக கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் மூலமாக கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு 90, 93களில் அனுப்பப்பட்டுள்ளனர்.
அதில் சிறுவன் ஒருவன் 12 வயதில் 93றாம் ஆண்டில் குறித்த கிராம் சேவை உத்தியோகத்தர் மூலமாக அனுப்பப்பட்டான். அவன் இருபத்தெட்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் பெற்றோரை வந்து சேரவில்லை என்கின்ற மனித உரிமை மீறலும் நடைபெற்றுள்ளது.
பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் சில அரச உத்தியோகத்தர்களும் இருக்கத்தான் செய்கிறார்ர்கள். அதே வேளை அர்ப்பணிப்பான உத்தியோகத்தர்கள், அதிகாரிகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
இப்படியான எல்லைப்புற கிராம மக்களின் பிரச்சினைகளை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று தீர்க்க வேண்டியது தார்மீகக் கடமையாகும்.
அண்மையில் ஒரு அரசியல்வாதியும் பரிவாரங்களும் வடமுனை ஊத்துச்சேனை ஊடாக வந்துள்ளார்கள். அவர் மக்களை விடுத்து மீராண்டகுளம் மண்ணைப் பார்த்துச் சென்றதாக மக்கள் கூறுகின்றனர்.
இப்படித்தான் மட்டக்களப்பு மண் மீட்பர்கள் மண் வர்த்தகர்களாக மாறியுள்ளனர். இவ்வாறாக எல்லைக்கிராம மக்கள் பல தொல்லைகளைச் சுமந்து நெருக்கடிக்குள் வாழ்கிறார்கள்.
ஆளுங்கட்சித் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆளுங்கட்சியின் பொம்மைகளாக இருந்து தலையாட்டிகளகவும், கைதூக்கிகளாகவும் இருந்து காலத்தைக் கடத்துகிறார்கள். பதவி சுகம், பண சுகத்தில் மிதக்கவே விரும்புகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.



இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri