ஈழத்தமிழருக்கான வெளியுறவுக் கொள்கையின் அவசியம் அதிகம் உணரப்படுகின்றதா?

America India Norway Tamil Nation Alliance
By Kanamirtha Dec 07, 2021 12:05 AM GMT
Report
Courtesy: பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

ஈழத்தமிழரின் அரசியலில் உள்நாட்டு மட்டத்தில் எழுந்த முரண்பாடுகளுக்கான தீர்வுகள் தோல்வியடைய பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தீர்வுக்கான முயற்சிகள் கடந்த காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

1987வரை இலங்கைக்குள் தீர்க்க முடியுமென்ற நம்பிக்கை படிப்படியாகக் குறைவடைந்து பிராந்திய அரசான இந்தியாவின் முன்முயற்சி தொடக்கப்பட்டது. இத்தகைய பரிமாணத்தை நோர்வே தலைமையிலான பேச்சுவார்த்தை இன்னொரு கட்டத்துக்குக் கொண்டு சென்றது.

அத்தகைய பரிமாணம் சர்வதேச நாடுகளின் அணுகுமுறைகளுக்கூடாகவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகும் என்ற வெளியைத் தோற்றுவித்தது. அத்தகைய நகர்வின் ஓர் கட்டமாகவே ஜெனிவா அரங்குக்காக ஈழத்தமிழர் அரசியல் தலைமைகளின் விசயங்களும் அமைந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக மிக அண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயமும், தமிழீழ விடுதலை கழகத்தின் வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பும் ஈழத்தமிழருக்குத் தெளிவான வெளியுறவுக் கொள்கையின் அவசியப்பாடு உணரப்பட்டுள்ளமையை வெளிப்படுத்துகிறது.

இக்கட்டுரையும் ஈழத்தமிழருக்கான வெளியுறவுக்கொள்கையின் போக்கை உரையாடுவதாக அமைய உள்ளது என கட்டுரை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,  

ஈழத்தமிழருக்கு 2009களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வெளியுறவுக்கொள்கை அவசியமாகியிருந்தது. இதுபற்றிய சாதகமான, பாதகமான உரையாடல் தமிழ் கருத்தியல் வாதிகளிடம் நிகழ்ந்துள்ளது.

அத்தகைய விவாதங்கள் அனைத்தும் தவிர்க்க முடியாது வெளியுறவுக்கொள்கை அவசியமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கித் தந்துள்ளது. நடைமுறை ரீதியில் இலங்கைத் தமிழரின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை அடைவது என்பது நாட்டுக்குள் சாத்தியமற்றது என்பது கடந்த 70ஆண்டுக் கால அனுபவத்தின் தொகுப்பாக உள்ளது.

எனவே தான் ஈழத்தமிழர்கள் பிராந்திய, சர்வதேச அரசுகளிடம் அரசியல் தீர்வுக்காகத் தங்கியிருக்கும் நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதிலொரு முக்கிய அத்தியாயமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயம் அமைகின்றது. தமிழ்த்தேசிய பரப்பில் உள்ள அரசியல் தரப்பினர் இதனைக் கடந்த தசாப்தங்களில் ஆரம்பித்திருக்க வேண்டும்.

எனினும் தற்போது அவர்களது எண்ணங்களைக் கடந்து தேவைப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்களது நடவடிக்கைகள் உணர்த்துகிறது. அதற்கான பிராந்திய அரசியல் சூழலும், சர்வதேச அரசியல் சூழலும் பொருத்தமான முடிவுகளை நோக்கி நகர்வதற்கு ஏற்ற வகையில் காணப்படுகிறது.

அதாவது, பனிப்போருக்கு பின்னான காலப்பகுதியில் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்தியுள்ள அரசியல் வாய்ப்புக்களை விட கோவிட்டுக்கு பின்பான உலக ஒழுங்குக்கான தயார்ப்படுத்தல் ஏற்படுத்தியுள்ள அரசியல் சந்தர்ப்பங்கள் அதிக வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது.

இத்தகைய வாய்ப்பின் திறவுகோலாக 2009 போரின் முடிவு வழிவகுத்திருந்தது. சீனாவின் இலங்கை மீதான செல்வாக்கின் வளர்ச்சி, இந்திய-அமெரிக்கா கூட்டின் உருவாக்கம், இந்தோ-பசுபிக் உபாயம் மற்றும் குவாட்-01(அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான்), குவாட்-02(அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம்) என்பன அத்தகைய சூழலைத் தந்திருந்தது.

அதிலும் சீனா எதிர் இந்தியா-அமெரிக்கா கூட்டு என்பது ஈழத்தமிழரின் பிரதான அரசியல் வாய்ப்புக்கான சூழலாகக் காணப்படுகின்றது. தென்னிலங்கை ஆட்சியாளர்களும் சீனாவுடனான நெருக்கத்தைத் தீவிரமாகப் பின்பற்றி வருகின்ற சூழலில் ஈழத்தமிழர்கள் இந்தியா சார்ந்தும், அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள் சார்ந்தும் வாய்ப்புக்களுக்கான களத்தைக் கண்டுகொள்ளவும், பயன்படுத்தவும் முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆழமாக உரையாடுதல் அவசியமாகும். 

முதலாவது, தென்னிலங்கைக்கும் சீனாவுக்குமான உறவானது, சீனாவுக்கும் ஈழத்தமிழருக்குமான எதிர்முனையான வாதங்களைக் கொண்டதல்ல. தென்னிலங்கை எவ்வாறு சீனாவை நகர்த்திக்கொண்டு இந்தியாவையும் மேற்கையும் தமது அரசியல் நலனுக்காகப் பயன்படுத்துகின்றதோ, அதே அணுகுமுறைக்குள் அத்தகைய சீன-தென்னிலங்கை உறவை ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் தலைகீழாக பிரயோகப்படுத்த வேண்டும். இதற்காகச் சீனா எதிர்ப்பு வாதம் கொள்வது என்பது வாதமல்ல. அது ஒரு தந்திரோபாய அணுகுமுறை மட்டுமேயாகும்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் உலகில் உள்ள எல்லா அரசுகளும் ஏனைய அரசுகளதும், அரசியல் சமூகங்களதும் இருப்புக்கு அவசியமானதாகும். அதாவது, தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கையாளுவது போன்று ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளும் சீனாவை முன்னிறுத்திக்கொண்டு மேற்கையும் இந்தியாவையும் பிரயோகப்படுத்துதல் அவசியமான வெளியுறவு உத்தியாக அமைதல் வேண்டும். தென்னிலங்கை சீனாவை முன்னிறுத்துவதும் ஈழத்தமிழர்கள் சீனாவை முன்னிறுத்துவதென்பதும் வேறு வேறான அர்த்தத்தில் நோக்கப்படுதல் வேண்டும்.

இரண்டாவது, இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகு நாடுகளிற்கு ஈழத்தமிழர்களுடைய அரசியல் நிரந்தரமானதும் வாய்ப்பானதுமான ஓர் அரசியல் முதலீடாகும். அத்தகைய முதலீட்டை இதுவரையும் ஈழத்தமிழர் பயன்படுத்தாது இந்தியாவும் அமெரிக்காவுமே அதிகம் பயன்படுத்தியதோடு சாதகமான விளைவுகளை அவர்களே அறுவடை செய்துள்ளார்கள்.

ஈழத்தமிழர்கள் அத்தகைய தேசங்களின் ஒத்துழைப்பை தமதாக்கி ஓர் ஆரோக்கியமான அரசியல் சமூக இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கான உரையாடல்களையோ அல்லது உபாயங்களையோ இதுவரை பயன்படுத்தவில்லை.

அந்நாடுகளைப் பொறுத்தவரை தற்போது எழுந்துள்ள இலங்கை-சீனா உறவைத் தகர்ப்பதுவும் இலங்கைத்தீவு மீது தமது செல்வாக்கை பிரயோகப்படுத்தவதுமே பிரதான நோக்கமாக உள்ளது. அத்தகைய நோக்கை அடைவதற்கு அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வதற்குத் தயாராக உள்ளனர்.

அத்தகைய எல்லையைக் கண்டறிந்து அதற்கான வெளியை திறந்து, அத்தகைய அரசுகளின் நலன்களையும் ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்களையும் ஓரிடத்தில் சந்திப்பதற்கு ஏற்ற வெளியுறவுக்கொள்கையொன்று ஈழத்தமிழருக்கு அவசியமானதாகும்.

இப்பிராந்தியம் மீது அமெரிக்கா உட்பட்ட மேற்குலகின் நலன் என்பது சீனா எதிர்ப்பு வாதத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல.

அவர்களது பொருளாதார இராணுவ நலன்களோடும் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய பிணைப்புக்கான அறிகுறியே தென் குவாட் என அழைக்கப்படும் குவாட்-02 எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளதன் நோக்கமாகும். மறுபக்கத்தில் சீனா மாத்திரமின்றி சீனாவுடன் ரஸ்யாவும் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்சீனக்கடலிலிருந்து தெற்கு இந்து சமுத்திர கடல்பகுதி வரை இந்திய-அமெரிக்கா கூட்டு எதிர் சீன-ரஷ்ய கூட்டு என்ற எதிர்ப்பு அலை எழுச்சியடைந்து வருகிறது. இத்தகைய சூழலின் பிரதான மையம் இந்து சமுத்திரம் ஆகும். அதில் இலங்கை தீவும் முக்கியத்துவம் பெறுகிறது.

மூன்றாவது, பிராந்திய அரசாகிய இந்தியா அமெரிக்காவோடு மட்டுமன்றி ஏனைய மேற்கு நாடுகளோடு இணைந்து கொண்டு சீனாவிற்கு எதிரான முறியடிப்பு போரை மேற்கொண்டு வருகிறது.

ஈழத்தமிழர்கள் இந்தியத் தேசத்துடனான உறவைக் கடந்து தமது வெளியுறவை வரைபது என்பது கடினமானது. காரணம் இந்தியத் தேசத்தின் நலனுக்குள் இலங்கைத் தீவின் இருப்பு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

அதனால், ஈழத்தமிழர்களின் வெளியுறவின் முதற்படி இந்தியாவாக அமைவதோடு இந்தியாவிற்கூடாக அமெரிக்காவையும் மேற்கையும் மட்டுமன்றி, சீனாவை அணுகுவதும் பொருத்தமானதாக அமையும்.

அதாவது, பனிப்போர் காலத்தில் அமெரிக்கா எதிர் இந்தியா எனும் போக்கு நிலவியது. ஆனால் தற்போது இந்தியா, அமெரிக்கா, மேற்கு கூட்டு ஒரே நேர்கோட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய நேர்கோட்டில் ஈழத்தமிழருக்கான திறவுகோல் இந்தியா என்பதை நிராகரித்துவிட்டுப் பயணிக்க முடியாது.

இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு என்பதற்காக ஈழத்தமிழர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவை அணுகுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும். மறுபுறமாக இந்தியாவூடாக அமெரிக்காவையும் மேற்கையும் அணுகும் போது அது இலகுவான செய்முறையாக அமையும்.

அத்துடன், இந்தியாவின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளும் போது அமெரிக்காவிற்கும் மேற்குக்கும் பலமானதொரு செய்முறையாகவும் அமையும். இந்தியாவைப் பொறுத்தவரை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்புரிமை இல்லாத போதும் இந்தோ-பசுபிக் உபாயத்திலும், குவாட்-01, குவாட்-02 அமைப்புக்களில் இந்தியாவை மையப்படுத்தியே அமெரிக்காவும், மேற்கும் இப்பிராந்தியத்தில் சுழலுகின்றது என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

எனவே இந்தியா சார்ந்து நகர்வுகளில் முனைப்பான கவனத்தையும் முயற்சியையும் மேற்கொள்வதோடு இந்தியாவின் அணுசரணைக்கூடாக அமெரிக்காவையும், மேற்குலகையும் கையாள முனைவது ஈழத்தமிழரின் வெளியுறவுக்கான அரசியல் வெளியை இலகுவானதாக்கும்.

நான்காவது, இத்தகைய பிரதான நாடுகளோடு ஐரோப்பாவிலும் இதர கண்டங்களிலும் காணப்படும் ஈழத்தமிழர்களின் அரசியல் வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ள தேசங்களோடு உறவு கொள்ளுதல் என்பது பிரதானமான அம்சமாகும்.

குறிப்பாக அண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு தமது பயணத்தில் பிரித்தானிய வெளி விவகார அமைச்சரைச் சந்தித்தது போல் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி. கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான பொறிமுறைகளை புலம்பெயர்ந்தவர்களூடாகவும், அவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ள அமைப்புக்களூடாகவும் சாத்தியப்படுத்துதல் வேண்டும். இவ்வகை உறவானது தொடர்ச்சியானதாகவும், புரிதலைக் கொண்டதாகவும் கூட்டுத்தன்மை கொண்டதாகவும் அமைதல் வேண்டும்.

எனவே, ஈழத்தமிழர் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்குக் காணப்படும் அரசியல் வெளியை ஜனநாயக பூர்வமான அணுகுமுறைகளுக்கூடாக நகர்த்துதல் வேண்டும்.

அத்தகைய நகர்வு கட்சி நலன், தனிமனித நலன் தேர்தல் வெற்றிக்கான அடைவை எண்ணிய நலன்சார்ந்த நகர்வுகள் எதனையும் மேற்கொள்ளாது ஈழத்தமிழர்களின் அரசியல் நலனை மட்டும் அடைவதற்கான அணுகுமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இலங்கையின் ஆட்சியாளர்கள் தமது முதல் வெளிநாட்டு விஜயத்தை இந்தியா நோக்கியே மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர், மற்றும் வெளி விவகார அமைச்சரின் வெளிநாட்டு விஜயத்தின் முதல் பயணம் இந்தியாவாகவே அமையும்.

இதனை ஓர் பாடமாக ஈழத்தமிழர் கொள்வதோடு ஏனைய நாடுகளையும் அணுகுவதன் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பை உத்தரவாதப்படுத்த முடியும். தனிமனித விருப்புக்களையும் கட்சிகளின் இலாபங்களையும் கைவிட்டுவிட்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைகளாக இயங்கவும் உழைக்கவும் தயாராகுங்கள்.

உலக ஒழுங்கு குழம்பியிருக்கிறது. தென் இலங்கை ஆட்சியும் அத்தகைய குழப்பத்தை எததிர்கொண்டுவருகிறது. பிராந்திய அரசும் மேற்குலகமும் அத்தகைய குழப்பத்தை தனதாக்க முயலுகிறது. இது ஈழத்தமிழருக்கு வாய்ப்பான சந்தர்ப்பம்.

இதற்கான முதல் அடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவும் புலம்பெயர் அமைப்புக்களும் எடுத்து வைத்துள்ளன. ஆனால் அதனை ஈழத்தமிழருக்கானதாக ஆக்குவதற்கான முனைப்புக்கள் போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை.

அது தனிமனிதர்களையும் கட்சியின் விருப்பங்களையும் இலக்காகக் கொண்டு கட்டப்பட்டது. அதனால் அத்தகைய முயற்சிகள் கூட்டாகத் திட்டமிடப்பட்டு அறிவுப்பூர்வமாக உரையாடி முன்வைப்புக்களுடன் நகர்த்தப்படுதல் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

- பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் -

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US