2019ல் வாகன ஒலி போராட்டத்தை ஆதரித்த மஹிந்த இன்று எதிர்க்கின்றாரா? – ஐ.தே.க
கடந்த 2019ம் ஆண்டில் வாகன ஒலி எழுப்பும் போராட்டத்தை ஆதரளித்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று அவ்வாறான போராட்டங்களை ஏன் எதிர்க்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் முக்கிய பிரபு ஒருவர் பயணம் செய்வதற்காக வீதி மூடப்பட்டிருந்த போது மக்கள் அதிருப்தியில் வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தின் போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மக்களின் செயற்பாடு நியாயமானது என சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அண்மையில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் பயணித்த போது வாகன நடமாட்டம் முடக்கப்பட்டமைக்கு அதேவிதமாக மக்கள் வாகனங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த இளைஞரை கைது செய்தமை பிழையானது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த நபர் ஏன் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெளிவாக விளக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
பொதுமக்களின் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதனை இந்த கைது நிரூபணம் செய்கின்றத என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் என்பனவற்றை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.