பொலிஸ் நிலையத்தில் நடந்த திருட்டு - கையும் களவுமாக சிக்கிய தொல்பொருள் திணைக்கள பணியாளர்கள்
திருகோணமலை - குச்சவெளி பகுதியில் அமைந்துள்ள பழைய பொலிஸ் நிலையக் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இரும்புப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(13.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பட்டா ரக லொறி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் நடந்த திருட்டு
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குச்சவெளி பகுதியில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பழைய பொலிஸ் நிலையக் கட்டிடத்திற்குள், நேற்றுமுன்தினம்(12) ஒரு குழுவினர் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குச்சவெளி பொலிஸார் அதிரடிச் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் நிலையக் கட்டிடத்தின் இரும்புப் பாகங்கள் மற்றும் கூரை இரும்புகளைக் கழற்றி, அங்கிருந்த பட்டா ரக லொறியில் ஏற்றிக்கொண்டிருந்த போதே இந்த நான்கு சந்தேக நபர்களும் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இவர்களில் இருவர் தொல்பொருள் திணைக்களத்தில் தற்காலிக அல்லது நிரந்தர ஊழியர்களாகக் கடமையாற்றி வருபவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நால்வர் கைது
அரச சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய திணைக்களத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடப்பட்ட பெருமளவிலான இரும்புப் பொருட்கள், இரும்புகளைக் கழற்றப் பயன்படுத்திய உபகரணங்கள், திருட்டுப் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட லொறி மற்றும் இரும்புப் பொருட்களும் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைக் குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சீரியல்கள் நேரம் மாற்றமா?... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம் Cineulagam