அமெரிக்காவினால் ஈரானுக்கு தொடரும் அச்சுறுத்தல்! இலங்கையிடம் பாதுகாப்பு கோரி உள்நுழைந்துள்ள 20 கப்பல்கள்
ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் சுமார் 13இற்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. மேலும் பல கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக TankerTrackers இணையத்தளத்தின் சர்வதேச கடற்படை புலனாய்வுப் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.
ஈரானிய கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய ஈரானிய கொடியுடன் கூடிய 13 எண்ணெய் தாங்கி கப்பல்கள் உட்பட மேலும் சில ஈரானிய கப்பல்கள் இலங்கையின் சர்வதேச கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல்கள் மீண்டும் ஈரானிய துறைகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கையை அண்மித்த பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக டேங்கர்ட்ரேக்கர்ஸ் இணை நிறுவனர் சமீர் மதானி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தக் கப்பல்களுக்கு இலங்கை அரசாங்கம் எந்தவொரு வசதிகளையோ அல்லது உதவிகளையோ வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்
ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எனினும் இலங்கையின் கடற்பரப்பை தாண்டி, சர்வதேச கடலில் அவை நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், அவற்றுக்காக பொறுப்பை நாடு ஏற்காது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க போர்க்கப்பல்களின் தடை காரணமாக, கடந்த ஜூலை இரண்டாம் வாரத்திற்கு பின்னர் ஈரானின் கார்க் தீவிலிருந்து மத்திய கிழக்கு பகுதிக்கு வெளியே உள்ள எந்தவொரு இலக்குக்கும் எண்ணெய் ஏற்றப்படவில்லை.
கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க கடற்படைத் தடையினால் 20 இற்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஈரான் துறைமுகங்களை நோக்கி வந்த 75 க்கும் மேற்பட்ட சர்வதேச கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.