இலங்கைக்கு அருகில் விபத்திற்கு உள்ளான ஈரானிய கப்பல் - தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்
இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பல்வேறு நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற கூட்டுப்பயிற்சி வங்காளவிரிகுடா கடலில் நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பயிற்சியில் ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக போர் கப்பலும் பங்கேற்றதாகவும், இந்த கூட்டுப்பயிற்சிக்குப் பின் விசாகப்பட்டினத்தில் இருந்து ஈரான் போர் கப்பல் கடந்த சில நாட்களுக்குமுன் புறப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் போர் கப்பல் இன்று அதிகாலை இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, ஈரான் போர் கப்பலை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்திய பெருங்கடலில் சென்றுகொண்டிருந்த ஈரான் போர் கப்பலை தாக்கியது யார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நீர்மூழ்கி போர் கப்பல் மூலம் ஈரான் போர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது என பெரும்பாலான செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையானது தற்போது உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடவடிக்கையானது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
காலி கடற்கரையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் விபத்திற்கு இலக்கானதாக கூறப்படும் ஈரானிய கடற்படை கப்பலான ஐரிஸ் தேனா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பலால் (Submarine) தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்ட விசாரணை
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையினரின் உத்தியோகபூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக இலங்கையில் செய்திகள் வெளிவந்துள்ளன.
அதேவேளை இந்த தாக்குதலானது அமெரிக்காவால் நடத்தப்பட்டுள்ளதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆரம்பத்தில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்து என கருதப்பட்ட நிலையில், தற்போது நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இது நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்ட தாக்குதல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கராபிட்டிய போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், விசேட நிபுணர் மருத்துவர் எஸ்.டி.யு.எம். ரங்க இது குறித்துத் தெரிவிக்கையில், அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் ஏழு பேர் நடுத்தர அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஏனையோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காயமடைந்தவர்கள் தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காயங்கள் எதனால் ஏற்பட்டன என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam