ட்ரம்பிற்கு ஈரான் கால்பந்து அணி பதிலடி
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈரானின் பங்கேற்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு ஈரான் கால்பந்து அணி மற்றும் அந்நாட்டு நிர்வாகம் கடும் பதிலடி கொடுத்துள்ளது.
தற்போதைய பதற்றமான சூழலில், ஈரான் வீரர்கள் அமெரிக்காவிற்கு வருவது அவர்களின் "உயிர் மற்றும் பாதுகாப்புக்கு" உகந்ததாக இருக்காது என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உலகக் கிண்ண தொடரில் பங்கேற்பது
இதற்குப் பதிலளித்த ஈரான் கால்பந்து கூட்டமைப்பு, உலகக்கோப்பை என்பது ஒரு நாட்டின் தனிப்பட்ட சொத்து அல்ல என்றும், அதனை நிர்வகிக்கும் அதிகாரம் ஃபிபா (FIFA) அமைப்புக்கே உள்ளது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் கால்பந்து அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகக்கோப்பை என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச நிகழ்வு. அதன் முடிவுகளை ஃபிபா மட்டுமே எடுக்க முடியும். எந்தவொரு தனிநபரோ அல்லது நாடோ தீர்மானிக்க முடியாது.

தகுதிச் சுற்றில் அபார வெற்றி பெற்று, முறையாகத் தகுதி பெற்றுள்ள ஈரான் அணியை யாராலும் நீக்க முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போட்டியை நடத்தும் ஒரு நாடு மற்ற நாடுகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாவிட்டால், அந்த நாட்டைத்தான் போட்டியை நடத்துவதிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஈரான் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரானின் விளையாட்டுத் துறை அமைச்சர் அகமது டோனியாமாலி, தற்போதைய போர் சூழலில் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் சர்வதேச விளையாட்டு அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.