செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்ச மீதான விசாரணை தீவிரப்படுத்த வேண்டும்..! ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய வடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(23.06.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப்புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், முதியோர்கள் என பல தரப்பட்டவர்களுடைய எலும்புக்கூடுகளும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இந்த புதைகுழிவிவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு
இதனைத் தொடர்ந்து, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கும் பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதி அமைச்சரின் இந்தக் கருத்து நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் - சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிற்கு நீதிமன்றினால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பிற்பாடு, குறித்த இரணுவ லான்ஸ்கோப்ரல் செம்மணியில் படையினரால் 300 – 400 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
அவருடைய தகவல்களின் அடிப்படையில், அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் 15 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்திரிக்கா குமாரதுங்க அரசு மீது புதைகுழி விசாரணையை கிடப்பில் போட்டிருந்தது.
விசாரணைகளை தீவிரப்படுத்தக் கோரிக்கை
தற்போது செம்மணி மனிதப்புதைகுழி அடையாளம் காணப்பட்டு, மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக பன்னாட்டு விசாரணையாளர்கள் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனது மனைவி மூலம் ஜனாதிபதிக்கு சோமரத்ன ராஜபக்ச கடிதமொன்றினை எழுதியிருந்தார்.

மேலும் அந்த கடிதத்தில் செம்மணியைத் தவிர, அரியாலை, கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்தின ராஜபக்சவிடம் பன்னாட்டு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam