மட்டக்களப்பு ஜோசப்பரராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவியிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
ஜோசப்பரராசசிங்கம் மக்கள் அமைப்பு தலைவியும் , இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அணி நிர்வாக உறுப்பினருமான கந்தையா கலைவாணியின் வீட்டுக்கு இன்று (29/05/2021) சென்ற புலனாய்வு பொலிஸார் இரண்டு மணி்நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு - ஆறுமுகத்தான்குடியிருப்பில் வதியும் சமூகசேவை செயல்பாட்டளாராகவும், இலங்கை தமிழரசு கட்சி மகளீர் அணி உறுப்பினராகவும் செயற்படும் கந்தையா கலைவாணி ஜோசப்பர்ராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவராகவும் ,பல சமூகப்பணிகளை மேற்கொண்டு வருபவர். அவரிடம் இன்று சென்ற சீருடை தரிக்காத தம்மை புலனாய்வு பொலிஸார் என அடையாளப்படுத்தி காலை 10, மணிமுதல் நண்பகல் 12, மணிவரை இரண்டு் மணி்நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது ஜோசப்பரராசசிங்கம் மக்கள் அமைப்புக்கு எங்கிருந்து்பணம் வருவது எனவும் ,அந்த அமைப்பால் இதுவரை செய்த சமூகசேவைகள் தொடர்பாகவும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை கடந்த பெப்ரவரி 3 தொடக்கம் பெப்ரவரி 7 வரை நடைபெற்ற பேரணிகள் தொடர்பாகவும், அதன் பின்னர் மட்டக்களப்பு மாமாங்கேஷ்வர ஆலயத்தில் மார்ச் மாதம் இடம்பெற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாகவும் ,விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோசப்பரராசசிங்கம் மக்கள் அமைப்பால் ஒரேயொரு நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்களுக்காக கல்வி செயற்பாட்டு உபகரணங்களை மட்டும் வழங்கியதாகவும் ,அதற்கான நன்கொடையாக தமக்கு உள்ளூர் நண்பர்கள் அறுபத்தி எட்டாயிரம் மட்டும் தந்ததாகவும், அதன் வரவு செலவு அறிக்கையை தாம் காட்டியதாகவும் கூறியதுடன் ,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், எமது இலங்கை தமிழரசு கட்சி தலைமையாலும் கலந்து கொள்ளுமாறு கேட்டதற்கு இணங்க தாம் கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் கலந்து கொண்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் மட்டக்களப்பு சிவில் அமைப்பு தலைவர் சீலன் என்பவரிடமும் இதேபோன்று விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு புறத்தில் கோவிட் நோய் பரவல் காரணமாக பயணத்தடையை வீட்டில் அனைவரும் இருக்கும் இவ்வேளையில் புலனாய்வு பொலிஸார் சீவில் உடைகளில் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, வவுணதீவு பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் சுமார் 45. பொலிஸாருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் இவ்வாறான விசாரணைகள் மக்கள் குடியிருப்பு வீடுகளில் சென்று இடம்பெற்று வருவதை தான் கேட்க முடியும் எனவும் கந்தையா கலைவாணி கூறியுள்ளார்.

