இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பம்: ரொஷான் ரணசிங்க
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20க்கு20 உலகக் கிண்ணப் போட்டியின் போது வீரர்களின் நடத்தையை மாத்திரமன்றி, அணி உறுப்பினர்கள் மீது அதிகாரிகள் உண்மையான அக்கறையை காட்டினார்களா என்பதை அறியவும் ஆறு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.
இந்தக் குழுவிற்கு மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசாலா சரோஜினி தலைமை தாங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் இந்தக் குழுவில் உள்ளடங்குவதோடு முன்னாள் அமைச்சு செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் நளின் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஷலனி ரோஷனா ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
கிரிக்கெட் வீரர் தொடர்பிலான பிரச்சினை
இந்தக் குழுவுக்கு காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை, ஆனால் செயல்முறையை விரைவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தொடர்பான பிரச்சினைகள் கையாளப்பட்ட விதம் கவலைக்குறியது.
26 வயதான அவருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மோசமான தகுதி, அல்லது மோசமான நடத்தைக்காக அவர் நீக்கப்பட்டார்.
எனினும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அவர், மோசமான தகுதியுடன் இருந்தால் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டால், அவரை சர்வதேச கிரிக்கெட்டிலும் இடம்பெறச் செய்யக்கூடாது என்பதே தனது கருத்து. அவர் ஏற்கனவே எல்.பி.எல் அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டுகள்
இந்தநிலையில் அடுத்த ஆண்டு முதல் ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எந்த ஒரு ஆட்டக்காரரும் அல்லது வீரரும் லீக் கிரிக்கெட்டில் கூட தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள்.
இலங்கை கிரிக்கெட்டில் எந்தவொரு இடைக்கால குழுவை நியமிக்கும் திட்டத்தையும்
அமைச்சர் மறுத்துள்ளார், ஆனால் 2023 ஆம் ஆண்டில் பல மாற்றங்கள் இருக்கும்
என தெரிவித்துள்ளார்.