மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 3 மில்லியன் ரூபாய் திட்டம் தொடர்பில் ஆராய்வு
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைவாக ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் 3 மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்பில் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட அபிவிருத்திகளை ஆராய்ந்து செயல்படுத்துவதற்கான பிரதேச மட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , பிரதேசச் செயலாளர் டெலிசியஸ் கனியூட் அரவிந்தராஜ் உட்படக் கிராம சேவையாளர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மட்ட அபிவிருத்தி பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்.
இதன் போது ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் ஒதுக்கப்பட்ட 3 மில்லியன் ரூபாய் நிதிக்கான அபிவிருத்திகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி குறித்த செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதுடன், குறித்த 3 மில்லியன் ரூபாய் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திக்கு வீதாசார அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஒதுக்கீடுகள் முன்வைக்கப்பட உள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் மடு, நானாட்டான், முசலி மற்றும் மன்னார் பிரதேசச் செயலகங்களிலும் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.