கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்த மாணவர்கள்!
கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து தமது புத்தாக்கம் தொடர்பில் தெரியப்படுத்தினர்.
இந்த சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (23.06.2025) நடைபெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் எட்டில் கற்கும், லின்டன் ஜெனிஸ் அறோன் அஜேய் மற்றும் திருச்செல்வம் செர்வின் ஆகிய மாணவர்களே இந்த முயற்சியை மேற்கொண்டனர்.
முயற்சி
கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைப் பிரம்பை இலத்திரனியல் உபகரணங்களை கொண்டு பல்வேறுபட்ட வசதிகளை மேம்படுத்தி அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இக்கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பானது எதிர்காலத்தில் சட்ட விதிமுறைகளுக்கு அமைய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் கண்பார்வையற்றவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறன.
இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பு தொடர்பில் கண் மருத்துவ சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர்.மு.மலரவன் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய மாணவர்களின் கண்டுபிடிப்பை பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு உதவ தயார் என தெரிவித்தார்.
வாழ்த்துக்கள்
இயலாமைக்கு உள்ளானவர்களுக்கான தேசிய சபை அங்கத்தவர் வெ. சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், கண்டுபிடிக்கபட்ட கருவியில் இன்னும் சிறிய மேம்படுத்தவேண்டிய செயல்பாடு உள்ளது என்றும், அதனை நிவர்த்தி செய்து பயன்பாட்டிற்கு வந்தால் விழிப்புலன் அற்றவர்களுக்கு மிகவும் உதவியாக அமையும் என கூறினார்.
இம் மாணவர்கள் இருவரையும் ஆளுநர் வாழ்த்தியதோடு இவ்வாறான புத்தாக்க கண்டுபிடிப்புகள் எமது மாணவர்கள் மத்தியில் இருந்து இன்னும் பல தோற்றம் பெறவேண்டும். அவை எமது மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த கண்டுபிடிப்பை மேம்படுத்தி கண்பார்வை அற்றவர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவு அளிப்போம் எனவும் தெரிவித்தார்.
