சர்வதேச மாணவர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய உள்துறை மந்திரி
அகதிகள், சர்வதேச மாணவர்களால் பிரித்தானியாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வம்சாவளியான பிரித்தானிய உள்துறை மந்திரி வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியொன்றில், பிரித்தானிய நாட்டில் குறைந்த திறனுடைய அகதிகள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் உள்ளனர்.
நாட்டின் வளர்ச்சி பாதிப்பு
இவர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்து உள்ளது. இந்த சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் வருகை தருவதுடன், அவர்கள் தங்களை சார்ந்து உள்ளனர்.
இதனால், அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அல்லது குறைவான திறன் கொண்ட வேலையில் ஈடுபடுகின்றனர். தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் பங்காற்றுவதும் இல்லை என கூறியுள்ளார்.
அதனால், பிரித்தானிய நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க, புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கவும் மற்றும் குடியுரிமை கொள்கையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ்சின் அரசில் உள்ள அனைத்து மூத்த மந்திரிகளும் புலம்பெயர்வோரை குறைக்கும் தங்களது நோக்கங்களை பகிர்ந்து கொண்டனர் என பிரேவர்மேன் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானிய நாட்டுக்கு வேலை தேடி செல்வது பாதிக்கப்பட கூடிய சூழலும் ஏற்பட்டு உள்ளது.