இலங்கையை மீட்டெடுக்க முன்வரும் சர்வதேச நாடுகள்..
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட , இலங்கையை மீட்டெடுக்க பல சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன.
அதன்படி, நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை சில நாடுகள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிவாரண நிதி உதவி
அதற்கமைய, சர்வதேச மனிதாபிமான நட்பின் ஊடாக, நியூசிலாந்து, அவசர மனிதாபிமான நிவாரணத்தை ஆதரித்து, ஒரு மில்லியன் நியூசிலாந்து டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, எட்டு இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை இலங்கைக்கு வழங்குவதாக பிரதித்தானியா அறிவித்துள்ளது.
குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து அவசரப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகள்
இதேவேளை, சீன அரசாங்கமும் இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
குறித்த நிதியை, சீன செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கியதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும், அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், இலங்கையிலுள்ள சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டுச் சீன சங்கம் ஆகியன இணைந்து நன்கொடை திட்டங்களை ஆரம்பித்துள்ளன.
இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 10 மில்லியன் இலங்கை ரூபாயைத் திரட்டியுள்ளன.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு பாரிய உதவிகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.