தமிழர் பகுதியில் துரித மீள்குடியேற்றங்கள் தொடர்பில் ரூபவதி கேதீஸ்வரன் வெளியிட்ட தகவல்(Video)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விரைவாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதால் தான் மீள்குடியேற்றங்களை துரிதப்படுத்த கூடியதாக இருந்தது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கலோ ரஸ் நிறுவனத்தின் 20 வது ஆண்டு நிறைவு விழா கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மக்களின் மீள் குடியேற்றத்துக்கும் வாழ்வாதார நடவடிக்கைகளை மிக விரைவாக முன்னெடுப்பதற்கும் விரைவுபடுத்தப்பட்ட வெடிபொருள் அகற்றலே உதவியாக அமைந்தது.
பாதுகாப்பான பிரதேசங்கள்
வெடிபொருள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பிரதேசங்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடியதாக இருந்தது.
அதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மேற்படி நிறுவனத்திற்கு நான் என்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த 20 வருடங்களாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே இந்த வெடிபொருள் அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்ற இந்த கலோரஸ் நிறுவனமானது திறம்பட செயலபட்டு வருகிறது.
வெடிபொருட்கள் அகற்றும் பணி
இந்த பணிகளுக்கு நாற்பது விதமான பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பது என்பது ஒரு பாராட்டத்திற்குரியது.
இந்த வெடிபொருட்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது பலர் காயமடைந்திருப்பதையும் அறிந்திருக்கின்றோம். அத்தோடு மட்டுமல்லாது பலர் உயிர்களைக் கூட தியாகம் செய்திருக்கின்றார்கள்.
இவ்வாறான களத்திலே நின்று பணியாற்றுபவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீள்குடியேற்றம் வாழ்வாதாரம் என்பவற்றை துரிதப்படுத்துவதற்கு இந்த கண்ணிவெடி அகற்றும் பணி மிக முக்கியமானதாக இருக்கின்றது. என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் விமான படையினர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உயர்நிலை அதிகாரிகள் கலோரஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.