வடக்கில் நான்கு அதிகாரிகளுக்கு உள்ளக இடமாற்றம்
வடக்கு மாகாண அமைச்சுகளில் கடமையாற்றிய நான்கு அதிகாரிகளுக்கு வடமாகாண பிரதம செயலாளரின் சிபாரிசின் அடிப்படையில் உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு அதிகாரிகளினது இடமாற்றம் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை இடமாற்றத்திற்கான அனுமதியை வடக்கு மாகாண ஆளுநர் எழுத்து மூலம் வழங்கியுள்ளார்.
புதிய நியமனங்கள்
இதுவரை காலமும் வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பதில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்த பற்றிக் நிரஞ்சன் வடக்கு கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் பதில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக பதவி வகித்த நந்தகோபன் கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளராகவும், தேவநந்தினி பாபு கூட்டுறவு ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளராக பிரணவநாதன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.