உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒருதுளியேனும் நம்பிக்கை இல்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்று தம்பிலுவில் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய எமது போராட்டம் கோவிட் -19 காரணமாக வீதியில் நின்று கேட்க முடியாத நிலைக்குப் பின்தள்ளப்பட்டுள்ளோம். 12 வருடமாகியும் சுற்றிவளைப்பின் போதும் , வீடு வீடாகப் பிடித்துச் செல்லப்பட்ட யுத்தத்தின் போது ஒப்படைக்கப்பட்ட எத்தனையோ உறவுகளை இன்று இழந்து நிற்கின்றோம்.
உலக வரலாற்றில் தமிழர்களாகிய நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளோம். உறவுகளை இழந்து தாங்கமுடியாத உயிர் வலியில் உள்ளோம். உறவுகளைத் தேடிய போராட்டத்தில் நூற்றிற்கு மேற்பட்ட பெற்றோரை இழந்துள்ளோம்.
இந்த நிலை இனியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்ட உறவுகளுக்கு ஏற்படக்கூடாது. ஒன்றுமில்லாத OMP காரியாலயத்தை இரவோடு இரவாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைத்துள்ளனர். 48வது ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கையைக் காப்பாற்றவே கிளிநொச்சி மாவட்டத்தில் அமைத்துள்ளனர்.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் . சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் புலனாய்வு பிரிவினரால் பல கெடுபிடிகளுக்கு ஆளாகியுள்ளோம். உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒருதுளியேனும் நம்பிக்கை இல்லை. சர்வதேசத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையுமே நம்புகின்றோம். எமது பிரச்சினை தீரும் வரை எமது போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.





நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
