பணம் வசூலிப்பதை தவிர்க்கவும்! பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோர்களுக்கு எவ்வித பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் எனவும், இதற்காகப் பெற்றோரிடம் நிதி வசூலிப்பதைத் தவிர்க்குமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிபர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான விழிப்புணர்வுச் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகம்
"எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை ஆரம்பப் பிரிவில் 25 - 30 வரையாகவும், இரண்டாம் நிலைப் பிரிவில் 35 வரையாகவும் மட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் சுற்றறிக்கைகளுக்குப் புறம்பாக மாணவர்களை இணைத்துக்கொள்ளக் கூடாது. 2026ஆம் ஆண்டில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' மற்றும் இணைய வசதிகள் வழங்கப்படும்.
இதற்காகப் பெற்றோரிடம் பணம் கோரக் கூடாது. 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துவதை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வித்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 23,000 ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறும்.
அதிபர் மற்றும் ஆசிரியர் நியமனங்கள்
அதிபர் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது, அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தித் தமக்கு விருப்பமான இடங்களைப் பெற முற்படாமல், எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும்.
அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயச் சம்பளக் குழுவிற்குப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையின் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தகுதியுள்ளவர்கள் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்காமல் ஒரே பாடசாலையில் பிரதி அதிபர்களாகத் தொடர்வதை அனுமதிக்க முடியாது.
மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தேசிய மட்டத்திலான தீர்மானங்கள் வரும் வரை காத்திருக்காது, கோட்ட மற்றும் மாகாண மட்டத்திலேயே துரித தீர்வுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, அதுல வெலந்தகொட மற்றும் மாகாண, வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

