போராட்டக்காரர்கள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
“போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு, அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்பாளர், பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து சூம் ஊடாக கலந்துரையாடிய கட்சியின் செயலாளர் நாயகம்,
பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் தங்களின் உணர்வுகளை
வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் எதிர்கொள்ளுகின்ற இடர்களைத் துடைப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்ற கட்சி என்ற அடிப்படையில் அதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
மேலும், வன்முறைகளின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என்ற எமது நம்பிக்கையைப்
போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.