நான் ஒரு ஈரானிய உளவாளியாக இருந்திருந்தால்.. - ட்ரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி பங்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தின் போது, கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் டொரன்ஸ் பகுதியைச் சேர்ந்த கோல் தோமஸ் ஆலன் (Cole Thomas Allen) என்பவரே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சந்தேக நபர் ஆவார்.
தாக்குதல் நடத்துவதற்கு சரியாக பத்து நிமிடங்களுக்கு முன்னதாக, ஆலன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு நீண்ட கொள்கை அறிக்கையை (Manifesto) அனுப்பியுள்ளார்.
குடும்பத்தினருக்கு Manifesto
அதில் அவர் தனது செயலுக்கான காரணங்களையும், இலக்குகளையும் விரிவாக விளக்கியுள்ளார். அந்த அறிக்கையில் தன்னை "கோல் 'coldForce' நட்புமுறை கூட்டாட்சி கொலையாளி" என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

அந்த ஆவணத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளை அவர்களின் பதவியின் முன்னனுபவம் அடிப்படையில் வரிசைப்படுத்தி, அவர்களைத் தனது இலக்குகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எப்.பி.ஐ பணிப்பாளர் காஷ் படேலை (Kash Patel) மட்டும் அந்தப் பட்டியலில் இருந்து அவர் விலக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆலன் அந்த ஹோட்டலுக்குள் பல ஆயுதங்களுடன் எவ்விதத் தடையுமின்றி நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டல் பாதுகாப்புப் படையினர் அன்றைய தினம் புதிதாக வருபவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தியதாகவும், ஒரு நாள் முன்பே அறையை முன்பதிவு செய்து தங்கியிருந்த தன்னைப் போன்றவர்களைக் கவனிக்கத் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
"ஒரு ஈரானிய உளவாளி என்னைப் போல உள்ளே வந்திருந்தால் ஒரு பெரிய இயந்திரத் துப்பாக்கியையே (Ma Deuce) உள்ளே கொண்டு வந்திருக்க முடியும்" என்று அவர் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரகசியப் புலனாய்வு
தனது செயலை அவர் ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கையாகப் பார்க்காமல், "ஒடுக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு" என்றே வாதாடியுள்ளார்.

"மற்றவர்கள் ஒடுக்கப்படும்போது அமைதியாக இருப்பது கிறிஸ்தவ பண்பு அல்ல, அது குற்றத்திற்குத் துணை போவதாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே சுவர்களைத் துளைக்காத 'பக்ஷாட்' (Buckshot) வகை குண்டுகளைப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் அந்த அறிக்கையில் எழுதியுள்ளார்.
இந்த அறிக்கையைப் பெற்றவுடன் அதிர்ச்சியடைந்த ஆலனின் சகோதரர், உடனடியாகக் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அதேபோல், மேரிலாந்தில் வசிக்கும் அவரது சகோதரியும் ஆலனுக்கு நீண்டகாலமாகவே தீவிர அரசியல் கருத்துக்கள் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, அவர் முக்கிய ஹால் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பே பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். தற்போது பொலிஸார் பிடியில் உள்ள கோல் தோமஸ் ஆலனிடம் இரகசியப் புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவின் மிக உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஓட்டைகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri