கிண்ணியாவில் 7 வயது சிறுவன் மரணம் - விசாரணைகள் ஆரம்பம்
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கூபா நகரில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை பகல் சாப்பாட்டை உண்டு விட்டுத் தூங்கி எழும்பிய போது சிறுவன் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டதாகவும், இதனையடுத்து கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த விடயத்தில் கிண்ணியா கூபா நகர்ப் பகுதியைச் சேர்ந்த நளீம் முகம்மட் நஸ்மிர் (7 வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சிறுவனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையில் சிறுவருக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.முகம்மது ஷாபி கிண்ணியா பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.
இதேவேளை சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.