இலங்கையில் இடம்பெற்ற இன படுகொலைகள் தொடர்பில் குறைவடைந்துள்ள சர்வதேச பார்வை
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், அரசியல் கொலைகள் சம்பந்தமாக சர்வதேசத்தின் பார்வை குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சுவீடன் ஸ்டாக்ஹோமில் 12ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இடம்பெற்ற 'அமைதி மற்றும் மேம்பாட்டு மன்றம் 2025' என்னும் கருத்தரங்கில் விசேட அழைப்பின் பெயரில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இலங்கையின் பிரச்சினை ஆய்வு மற்றும் கூட்டு உருவாக்கம் மூலம் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் என்னும் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் உரையாற்றுகையில்,
அநீதிகள் இனப்படுகொலை
“இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள் இனப்படுகொலைகள் மற்றும் அரசியல் கொலைகள் சம்பந்தமான சர்வதேச பார்வையானது குறைவடைந்துள்ளது.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னரும் உலகில் பல பகுதிகளில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வகை மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் சில நாடுகளில் இடம்பெற்றன,இடம்பெற்று வருகின்றன. ஈராக், சிரியா, மியான்மார், ரஷ்யா, இஸ்ரேல், உக்ரேன், பலஸ்தீன் ஆகிய நாடுகள் அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.
இந்நாடுகள் அனைத்தும், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையதாக சர்வதேச அமைப்புகளால் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானவை ஆகும். இந்த நாடுகளில் காட்டப்படுகின்ற அதீதமான கவனம் காரணமாக இலங்கையில் நிகழ்ந்த அநீதிகள் தொடர்பான கரிசனைகள் குறைவாக காணப்படுகின்றன.
யுத்தம் மௌனிக்கப்பட்டும் நாட்டின் அரசியல் நிலைமை பொருளாதாரம் என்பன ஸ்திரநிலையில் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. அதிலும் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் சர்வதேசத்தின் பார்வை எமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் அழுத்தமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான பொருளாதார பலம்மிக்க நீதியான நாட்டை கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் அழுத்தம் மிக இன்றியமையாததாக காணப்படுகின்றது என்றார். இக்கருத்தரங்கில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பல அரசியல் பிரமுகர்கள் உட்பட உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்: கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம்
