ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்! - ரணில் விடுத்துள்ள பணிப்பு
ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை இம்மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அதற்கான திகதியை வழங்கியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 20ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிக முக்கியமான நாள் என்பதால் கட்சித் தலைவர் குறித்த நாளை தெரிவு செய்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 20ம் திகதி கட்சியின் நிறுவனர் ஜெனரல் டி. எஸ். சேனாநாயக்கவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. ரணில் விக்ரமசிங்க மூன்று பிரிவுகளின் கீழ் கட்சி உறுப்பினர்களை நியமிக்க முன்மொழிந்துள்ளார்.
அவற்றில் முதலாவது 1000 உறுப்பினர் அட்டை முறைமை, இரண்டாவது "டிஜிட்டல் உறுப்பினர்" அமைப்பு அல்லது ஆன்லைன் உறுப்பினர் முறைமை, மூன்றாவதாக வழக்கமான முறையில் கிராம அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது.
இந்நிலையில், நாடு முழுவது அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கும் வகையில் கட்சி உறுப்பினர்களை நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதுள்ள அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் பதிவுகளையும் புதுப்பிக்க கட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.