தலதா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட போது அவைக்கு சபாநாயகர் தலைமை தாங்கவில்லையென மறுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சந்தர்ப்பத்தில் அவைக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமை தாங்கவில்லை என சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பிலான ஊடக அறிக்கை ஒன்றை சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது தலதா அதுகோரள மீது பாலியல் ரீதியில் இழிவுபடுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை ஆளும் கட்சியினர் வெளியிட்டதாகவும், இது பாலியல் ரீதியான துன்புறுத்தல் எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது அவைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் இதனை வேடிக்கை பார்த்தார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். எனினும், குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவைக்கு சபாநாயகர் தலைமை தாங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஹன்சார்ட் அறிக்கை மற்றும் காணொளிகளை பரிசோதனை செய்யாது பொறுப்புணர்ச்சியற்ற வகையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இது சபாநாயகரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலானது எனவும் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.