இலங்கையில் டொலரை பெற்றுக்கொள்வதற்கான ரூபா கையிருப்பில் இல்லை! மத்திய வங்கி அறிவிப்பு
இலங்கையில் எரிபொருளைக்கொள்வனவு செய்வதற்கான டொலரை பெற்றுக்கொள்வதற்கான ரூபா தற்போது கையிருப்பில் இல்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருளுக்காக விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது செயற்படுத்தப்படுகின்ற போதிலும், டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அவசியமான ரூபா தற்போது கையிருப்பில் இல்லை.
ரூபா இல்லாமையினால் பாரிய அழுத்தம்
டொலரைப் பெற்றுக்கொள்ள கனியவள கூட்டுத்தாபனத்திடம் ரூபா இல்லை. அனைத்து எரிபொருளும் விற்பனை செய்யப்பட்டுள்ள போதிலும், அடுத்த எரிபொருள் கப்பலைப் பெற்றுக்கொள்வதற்காக ரூபா இல்லாவிட்டால், பாரிய அழுத்தம் உள்ளது.
விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால், திறைசேரியிடம் ரூபா கோரப்படுகிறது. மிகவும் தாமதமாக விலை அதிரிக்கப்பட்டமை மற்றும் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கும்போது, அதற்கான பணம் கிடைக்காமையால் கனியவள கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குகின்றது.
திறைசேரியிடம் கடன் கோரும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
தற்போது பெட்ரோலிய கூட்டுத்தாபனம், டொலரை பெற்றுக்கொள்வதற்காக, 217 பில்லியன் ரூபாவை திறைசேரியிடம் கோருகின்றது. திறைசேரியினால் எவ்வாறு ஒரேடியாக 217 பில்லியனை வழங்க முடியும்.
இந்த நிலையில், வழங்குவதற்கு பணம் இல்லை என மத்திய வங்கி தீர்மானித்தால், டொலர் இருந்தாலும் அதனை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யும் வழி இல்லாத நிலை ஏற்படும்.
இதன் காரணமாக, தற்போதைய எரிபொருளற்ற நிலை மேலும் சில காலங்களுக்கு நீடிக்கும் நிலை ஏற்படும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.