ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலராக செயற்படும் ரணில்! அனுர குமார திசாநாயக்க சாடல் (PHOTOS)
ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஸக்களின் பாதுகாவலர், அவர்களின் பாதுகாப்பிற்காக அதிகாரத்தைப் பெற்றுள்ளார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, பெலவத்தையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் குழுவொன்று கலந்துரையாடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் நெருக்கடிகளைத் தீர்க்க ரணில் விக்ரமசிங்கவும், கோட்டாபய ராஜபக்சவும் நம்பும் தீர்வை நாட்டில் உள்ள எவராலும் நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களின் ஆணைக்கு செவிசாய்க்காமல் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
“கோட்டாபயவை ரணில் நம்புவதும், ரணிலை கோட்டாபய நம்புவதும் தான் நடக்கும். அவர்கள் செய்வதை நாட்டின் குடிமக்கள் எவரும் நம்பமாட்டார்கள்”. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களின் ஆணைக்கு செவிசாய்க்காமல் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
”ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஸக்களின் பாதுகாவலர், அவர் அவர்களின் பாதுகாப்பிற்காக அதிகாரத்தைப் பெறுகிறார். அதே சமயம் ராஜபக்ஸக்கள் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாவலர்கள். அதைத்தான் கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம்.
மக்களின் கோரிக்கைகளுக்கு யார் செவிசாய்க்கிறார்கள் என்பதில் தான் நெருக்கடிக்கு தீர்வு உள்ளது.
சூழ்ச்சிக்காரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தீர்மானங்களே எட்டப்பட்டுள்ளதாகவும் மாளிகைகளில் நடைபெறும் சதிகளின் மூலமாக மக்களின் உண்மையான எதிர்பார்ப்பும் அபிப்பிராயங்களும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.