நடைமுறையாகும் அதிவிசேட திட்டங்கள்! வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு (Video)
இலங்கையில் வங்கித்தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பல ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிவிசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பொருளாதார நிலைமைகள் மற்றும் வங்கித்தொழில் துறையின் மீதான அதன் தாக்கத்தை கருத்திற்கொண்டு, வங்கித்தொழில் துறையின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வினைத்திறன் மிக்க நிதியியல் இடையீட்டையும் மற்றும் பொருளாதாரத்திற்கு கடன் வழங்குவதையும் வசதிப்படுத்துவதற்காக வங்கித்தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இலங்கை வங்கித்தொழில் துறையானது, அழுத்தமான சூழ்நிலையொன்றில் பயன்படுத்தக்கூடிய மூலதனத்தின் ஒரு கூடுதலான அடுக்கைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக 2.5 சதவீத மூலதனப் பாதுகாப்பு தாங்கியிருப்பைப் பேணி வருகின்றது. தேவையேற்படின் மூலதனப் பாதுகாப்பு தாங்கிருப்பை (2.5 சதவீதம் வரை) திரும்பப் பெறுவதற்கு வங்கிகளுக்கு துறை ரீதியான நெகிழ்ச்சித்தன்மை வழங்கப்படுவதுடன், இது பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் கட்டுப்பாடுகள்/ இலாபங்களை மீளனுப்புதல் மற்றும் மூன்று ஆண்டுகள் வரையிலான காலப்பகுதியில் மூலதனப் பாதுகாப்பு தாங்கிருப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மூலதன மேம்படுத்தல் திட்டத்தைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றிற்குட்பட்டு வழங்கப்படுகிறது.
- உரிமம்பெற்ற வங்கிகள் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கான தற்போதைய கால எல்லை (2022.12.31), 31.12.2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2022.12.31 இற்குள் குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்ய முடியாத உரிமம்பெற்ற வங்கிகள், 2022.12.31 இற்குள் பொருத ;தமான நிதியியல் நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்க அல்லது ஒன்றிணைக்கும் திட்டங்கள் உட்பட தங்கள் மூலதன மேம்படுத்தல் திட்டத்தைச் சமர்ப்பிப்பதுடன், மேலும் இவ்வுரிமம்பெற்ற வங்கிகள் குறைந்தபட்ச மூலதனத் தேவையை பூர்த்தி செய்யும் வரை பங்கிலாபங்களை வழங்குவதையும் இலாபங்களை மீளனுப்புவதிலிருந்தும் விலகியிருத்தல் வேண்டும்.
- உரிமம்பெற்ற வங்கிகள் மூலதனப் போதுமை விகிதத்தைக் கணக்கிடும் நோக்கங்களுக்காக, மேற்பார்வை மறுஆய்வுக்குட்பட்டு, செயற்பாட்டு இடர்நேர்விற்கான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களைக் கணக்கிடுவதற்காக தரப்படுத்தப்பட்ட அணுகுமுறை அல்லது மாற்றுத் தரப்படுத்தப்பட்ட அணுகுமுறை போன்று அணுகுமுறைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன.
- 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரையிலான மூலதனப் போதுமை விகிதத்தினைக் கணிப்பிடும் நோக்கங்களுக்காக இலங்கை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரச பிணையங்களின் மீதான தேறல் செய்யப்படாத சந்தைப் பெறுமதி இழப்புக்களைப் படிப்படியாகக் கருத்திற் கொள்வதற்கு நிபந்தனைகளுக்குட்பட்டு உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மை வழங்கப்பட்டுள்ளது.
- பன்னாட்டுத் தரங்களுக்கமைவாக மூலதனப் போதுமாந்தன்மைக்காக ஏனைய அனைத்தையுமுள்ளடக்கிய வருமானத்தினைப் பயன்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கியிருக்கின்றது.
- 2022ஆம் ஆண்டிற்கான உள்ளக மூலதனப் போதுமை அளவீட்டு முறைமை ஆவணத்தைச் சமர்ப்பிப்பதற்கான உரிமம்பெற்ற வங்கிகளின் காலக்கெடுவை இலங்கை மத்திய வங்கி 2022.06.30வரை ஒரு மாதத்தினால் நீடித்திருக்கின்றது.
- குறுங்கால நடவடிக்கையினூடாக, உரிமம்பெற்ற வங்கிகளின் திரவ நிலைமையினை அனுசரிப்பதற்கு ஆதரவாக 2022.09.30 வரை திரவத்தன்மைக் காப்பீட்டு விகிதம் மற்றும் நிகர நிலையான நிதியிடல் விகிதத்தினை 90 சதவீதத்திற்குக் குறையாமல் பராமரிப்பதற்கு உரிமம்பெற்ற வங்கிகளுக்கு
நெகிழ்ச்சித்தன்மை வழங்கப்பட்டிருக்கின்றது.