முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணம் - அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடற்பயிற்சி செய்வதற்காக தனது அறையை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
“நேற்று காலை 7.00 மணியளவில், சார், உடற்பயிற்சி செய்யத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்து, எந்த துப்பாக்கியை பயன்படுத்துகிறாய் என என்னிடம் கேட்டார். நான் எனது கைத்துப்பாக்கியின் மேகசினை கழற்றிவிட்டு அவரிடம் கொடுத்தேன். அந்த மேகசினையும் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். அதன் பின்னர் ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வருமாறு என்னிடம் கூறினார். நான் அதை எடுக்க சமையலறைப் பகுதிக்குச் சென்றபோது, வெடிப்பு சத்தம் கேட்டது. நான் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்” என முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரி வாக்குமூலம்
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்தின் போது அவர்களில் ஒருவர் கடமையில் இருந்தார்.

விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, பொலிஸ் திணைக்களத்தால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகும்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன, தனது உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டிலுள்ள அறையிலிருந்து நேற்று காலை 7 மணியளவில் வெளியே வந்துள்ளார்.
விக்ரமரத்ன வீட்டின் வரவேற்பறையில் இருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்றுள்ளார்.
பின்னர், அந்தப் பாதுகாப்பு அதிகாரியைத் தண்ணீர் கொண்டு வருமாறு கூறி அந்த இடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, தான் பெற்றுக்கொண்ட கைத்துப்பாக்கியால் தனது மார்புப் பகுதியில் சுட்டுக்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த பாதுகாப்பு அதிகாரி, விக்கிரமரத்ன கீழே விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது மனைவியும் இளைய மகனும் வீட்டிலிருந்தனர். அவர்கள் உடனடியாக அவரை முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்தது உயர் அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கினர். சி. டி. விக்கிரமரத்ன உயிரை மாய்த்துக்கொள்ள பயன்படுத்திய கைத்துப்பாக்கி வீட்டின் வரவேற்பறையில் கிடந்த நிலையில் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது.
திருமண உறவில் விரிசல்
விக்ரமரத்னவின் ஒரு மகனின் திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது. சி. டி. விக்ரமரத்ன ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் நேற்று மாலை வரை கண்டறியப்படவில்லை.
ஈஸ்டர் தாக்குதலில் சாரா ஜேஸ்மின் உயிரிழந்துவிட்டதாக டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துமாறு கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சாரா ஜேஸ்மின் சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது ஆரம்ப கட்ட விசாரணைகளில் உறுதியாகாத நிலையில், மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனையில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
குறித்த மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனை, சி. டி. விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபராக இருந்த காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டது. அக்காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக பிரசாத் ரணசிங்க கடமையாற்றினார்.
கடந்த 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், அன்றைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராகச் சந்தன விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று பொலிஸ் மா அதிபராக நிரந்தரமாக்கப்பட்ட அவர், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 25 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு மூன்று முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை.. ஜனாதிபதி மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri