நாடாளுமன்றில் ரணிலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனம் குறித்து வெளியான தகவல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், அந்த கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கு அமைய ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், கட்சி தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சியில் முன் வரிசை ஆசனம் வழங்கப்படவுள்ளது.
அந்த ஆசனம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன்படி, ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அடுத்ததாக ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிவப்பு யானை......
நல்லாட்சிக் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது என்ற அடிப்படையில் அப்போதைய எதிர்க்கட்சி ஜே.வி.பி.யை "சிவப்பு யானை" என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டது.
2018 அக்டோபர் சதித்திட்டத்தின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜேவிபி முக்கிய பங்கு வகித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.