இங்கிலாந்தை வெள்ளையடிப்பு செய்த இந்திய அணி: 142 ஓட்டங்களால் வெற்றி
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும், இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுடன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை வெள்ளையடிப்பு செய்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று(12) நடைபெற்றது.
இந்திய அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 356 ஓட்டங்களை பெற்றது.
ரோகித் சர்மா 1 ஓட்டம் பெற்று ஆட்டமிழந்தாலும் சுப்மன் கில் 112 ஓட்டங்கள், விராட் கோலி 52 ஓட்டங்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 78 ஓட்டங்கள், கே.எல். ராகுல் ஓட்டங்களும் அடித்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித் 10 ஓவர்கள் வீசி 64 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 357 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.
இங்கிலாந்து அணி
பில் சோல்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
7ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் டக்கெட் 22 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய பில் சால்ட் 21 பந்தில் 23 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் இங்கிலாந்து வீரர்களால் நிலைத்துநின்று விளையாட முடியவில்லை. டேம் பெண்டன் 41 பந்தில் 38 ஓட்டங்கள் எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.
ஹாரி ப்ரூக் (19), பட்லர் (6) ஆகியோரை ஹர்ஷித் ராணா வெளியேற்றினார்.
இறுதியாக இங்கிலாந்து 34.2 ஓவரில் 214 எடுத்து இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை வெள்ளையடிப்பு செய்தது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |