‘‘இலங்கை, இந்திய நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி கூறியது’’
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எடுக்கப்படும் இருத்தரப்பு தீர்மானங்கள் குறித்து இரண்டு நாடுகளின் மக்களுக்கு தெளிவுப்படுத்தி, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு அமைய அவற்றை நடைமுறைப்படுத்துவது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய(Gotabaya Rajapaksha) ராஜபக்ச, இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ச வர்தன் ஸ்ரீரிங்க்லாவுடனான(Harsh Vardhan Shringla) சந்திப்பில் கூறியுள்ளார்.
இரண்டு நாடுகளும் இணக்கப்பாடுகளுடன் எடுக்கும் தீர்மானங்கள் பற்றி மக்களுக்கு சரியாக தெளிவுப்படுத்தி, அவற்றின் சாதக, பாதங்களை விளக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் இந்திய வெளிவிவகார செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இந்திய பிரதமருக்கு உத்தியோகபூர்வமான விஜயத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1960, 70 ஆம் ஆண்டுகளில் இருந்து வந்த நட்புறவு மற்றும் தொடர்புகள மீண்டும் வலுப்படுத்தும் அவசியம் குறித்து விரிவாக விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ள ஜனாதிபதி, இந்து சமுத்திர பிராந்தியத்தை அமைதியான பிராந்தியமாக மாற்ற முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கடந்த 1971 ஆம் ஆண்டு முன்வைத்த யோசனையை முன்நோக்கி கொண்டு செல்ல இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பலவீனங்கள் மற்றும் வலுவான விடயங்களை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்தும் துரித அவசியம் இருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, இலங்கையில் இருந்து சென்ற தமிழ் மக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பக் கூடிய பின்னணியை உருவாக்க வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு எனவும் கூறியுள்ளார்.
இதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற தான் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தல் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பை விடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர்