புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பினை நினைவுகூர்ந்த லலித் வீரதுங்க
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போரின்போது இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது என கொவிட் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளின் பிரதானி லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
லலித் வீரதுங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் அவரது செயலாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை ஏற்றும் அதிகாரபூர்வ நிகழ்வு இன்றைய தினம் அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் நடைபெற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான நெருக்கமான உறவு போர் வெற்றிக்கு உதவியாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவும் தாமும் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடாத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது இந்தியா மற்றுமொரு போருக்கு உதவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த போர் கொரோனா வைரஸிற்கு எதிரான போர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் 2430 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.