இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்!சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல்
தமிழக மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ள நிலையில், அவர்களை மீட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் - மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒருவரினால், நேற்றையதினம் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி முதலான பகுதிகளிலிருந்து அண்மையில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற 68 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடுகையில், 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக இலங்கை கடற்படையினரின் குறித்த நடவடிக்கை காணப்படுகிறது.
எனவே, தமிழக மீனவர்கள் 68 பேரையும் இலங்கையிலிருந்து மீட்டு, ஒப்படைக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.