இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் - எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென குற்றச்சாட்டு
இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்தொழிலாளர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்.மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய நடவடிக்கையை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சரிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று (11.07.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத மீன்பிடி
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகள், அதேபோன்று அண்மையில் இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை எல்லையைக் கடந்து எமது இறங்குதுறை வரைக்கும், அதாவது கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்கும் இடம் வரைக்கும் வந்த விடயங்களை நான் இந்த ஊடக வாயிலாக உரிய தரப்புக்கு தெரிவிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.
குறிப்பாக, இந்த சட்டவிரோத மீன்பிடி முறைகள். இது தொடர்பாக பல விடயங்கள் மன்னார் மாவட்டத்திலும் வடக்கிலே காணப்பட்டாலும் மன்னார் மாவட்டத்திலே தொடர்ச்சியாக இது காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாக காலப்பகுதிகளிலே இந்தத் தொழில் முறைகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, இலங்கை கடற்தொழிலாளர்கள் குறிப்பாக வட பகுதி கடற்தொழிலாளர்கள் குறிப்பிட்ட தூரம் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கக் கூடிய அனுமதியை கடற்படையும் வழங்கியிருந்தது. இருந்தபோதிலும், அந்தப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து கடல் உணவுகளையும் அறுவடை செய்து, அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை அன்றைய காலப்பகுதியிலே அவர்கள் செய்து வந்தார்கள்.
2009க்கு பின்னர் யுத்தம் நிறைவுக்குப் பின்னர் படிப்படியாக அரசாங்கம் வேண்டிய தூரம் சென்று கடலில் நீங்கள் மீன் பிடிக்கலாம் என்று அந்த சூனியப் பிரதேசங்களை அகற்றிய பிறகு, இந்தத் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் எல்லை தாண்டியதாக இருக்கிறது. டைனமட், சுருக்குவலை, இழுவைப் படகுகள் அதேபோன்று தங்கூசி கொண்டு தொழில் பிடிக்கும் முறைகள், அவ்வாறான 14 வகையான தடை செய்யப்பட்ட தொழில் முறைகளும் இப்போது இந்த வடக்கு கடற்பரப்பிலும் அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது.
இதை நாங்கள் தடுப்பதற்கும் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், மன்னார் மாவட்டத்தில் எங்களுக்குள்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பல மீன்பிடி கிராமங்கள், தோறும் இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்களை தங்களது வாழ்வாதாரம் என்று கூறிக்கொண்டு செய்து வருகிறார்கள். நாங்கள் கிராமங்களைக் குறிப்பிடப்பட்டாலும், குறிப்பிடாவிட்டாலும் உண்மையிலேயே யார் யார் என்ன தொழில் செய்கிறார் என்று அந்தந்த கிராமங்களுக்கு தெரியும்.

எழுகின்ற கேள்வி
எனவே, இதில் நான் குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல்லவோ அல்லது இந்த விடயத்தில் ஒருவரைக் குறிப்பிடவோ நான் இந்த ஊடக சந்திப்பை செய்யவில்லை. இந்தத் தொழில்கள்... நாங்கள் தலைவர்கள் பல்வேறுபட்ட கூட்டங்களிலே பங்கு பெற்றுகின்றோம், பல மாகாண கூட்டங்களிலும் நாங்கள் பங்கு பெற்றிருக்கிறோம். ஆனால் குறிப்பாக, மன்னார் மாவட்டம் தொடர்ந்து பேசும்போது எங்களுக்கு சில விடயங்களை அங்கு பேசும்போது நாங்கள் தடுப்பதா அல்லது மௌனமாக இருப்பதா என்ற கேள்வியும் எழுகின்றது.
இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களாக இருக்கட்டும் அல்லது பல அரசியல் தரப்புகளைச் சந்தித்து நாங்கள் மனுக்குடுத்த விடயங்கள் போன்ற பல விடயங்கள், பேசிய விடயங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றன. ஆனால் அவை அனைத்துமே பலனற்று, இன்று வரை நாங்கள் 2009ல் எப்போது கலைக்கத் துவங்கினோமோ இந்த விடயத்தை, அப்போதிலிருந்து இன்று வரைக்கும் அந்த விஷயத்தைத் தான் கதைத்துக்கொண்டிருக்கின்றோம்.
எனவே, ஒரு விடயமும் தீர்ந்ததாக இல்லை. பல அரசுகள் வந்து போய்விட்டன. தற்போது கூட புதிய கடற்றொழில் அமைச்சர் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறுகின்றார். அவரை நாங்கள் பல தடவை சந்தித்து விட்டோம். கடந்த அரசாங்கங்களில் இருந்த கடற்றொழில் அமைச்சரை விட இப்போது இருக்கின்ற அமைச்சரை அமைச்சர் பொறுப்பெடுத்து ஒன்றரை வருடங்களிலே அவரை 15 தடவைக்கு மேல் நாங்கள் சந்தித்து எங்களது பிரச்சினைகளை வலியுறுத்தி, இந்த விடயங்களைத் தீர்த்து தாருங்கள் என்று.
ஒரு இணக்கமான செயல்பாட்டுடன் நாங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள அமைச்சரிடம் அணுகினாலும், அமைச்சர் அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிறுத்தலாம், இதை நிறுத்தலாம் , உங்களுடைய அபிப்பிராயம் என்ன, என்று கேட்டுப் பெறுகிறாரே தவிர, எதுவுமே அவர் செய்வதாக இல்லை. எனவே, இந்த விடயத்திலே கடந்த கால அரசாங்கம் செய்த தவறை தான் இப்போது இருக்கின்ற அரசாங்கம் செய்து வருகிறது. எந்தச் சட்டவிரோத மீன் பிடியும் இங்கு நின்றபாடில்லை.
குறிப்பாக, உள்ளூர் இழுவைப்படகு தொடர்பாக 2020-லே புத்தளத்தில் ஒரு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது, சமூக கடல் சூழல் சார்ந்த ஒரு அமைப்பினால் அங்கு வழக்குத் தாக்கல் பட்டு 23 பேர் இந்த வழக்கு போனது. ஆனால், இறுதியில் அந்த 23 பேரும் "நாங்கள் அவ்வாறான தொழிலைச் செய்யவில்லை" என்று சொன்னார்கள். திணைக்களமும் "நாங்கள் அவ்வாறான தொழிலுக்கு அனுமதி வழங்கவில்லை" என்று சொன்னார்கள்.எனவே சட்டவிரோத மீன்பிடி தொழிலை நிறுத்த எந்த தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.