மன்னார் கடற்பரப்பில் கைதான தமிழக கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழகம் - இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 8 பேரினுடைய வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிவான், இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 8 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த 29ஆம் திகதி இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இயேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மேற்படி 8 கடற்றொழிலாளர்களும் எல்லை தாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 23 படகுகளுடன் 174 தமிழக கடற்றொழிலாளர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |