எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடையினை இந்தியா நீக்கும்: இ.கதிர் உறுதி(Video)
எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான தடையினை இந்தியா நீக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
இன்று (24.11.2022) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவிக்கையில்,அண்மையில் இந்தியாவின் தலைநகருக்கு நாங்கள் அழைக்கப்பட்டு சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். தமிழர்களின் பிரதிநிதிகள் அங்கீகாரத்தினை இந்தியா வழங்கியுள்ளது.
போர் காலப்பகுதியில் தமிழ்மக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு ஆதாரவாக இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றாக இணைந்து உதவிகளை செய்து பின்னணியில் நின்றவர்கள் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள்.
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தொடர்ந்தும் எங்கள் வளங்களை நிலப்பரப்புக்களை அந்நிய நாடுகளுக்கு விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வடக்கில் ஆதிக்கம் செலுத்தும் சீனா
ஹம்பாந்தோட்டை, கொழும்பு மெரினா கடற்பரப்பு என்பன சீனாவிற்கு விற்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சீனா வடக்கில் தனது ஆதிக்கத்தினை செலுத்துவதற்காக அபிவிருத்தி என்ற போர்வையில் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போதும் இரகசியமான முறையில் இலங்கையின் அமைச்சுக்களுக்கு ஊடாக அந்த வேலைத்திட்டத்தினை சீனா முன்னெடுத்து வருகின்றது.
கடற்தொழிலில் ஈடுபடும் எமது உறவுகளை முன்னேற்றுவதாக கூறி பல அபிவிருத்திகளை முன்னெடுத்து உள்ளீர்க்கின்றார்கள் இலங்கையில் கடற்தொழில் அமைச்சுக்கூடாக முன்னெடுத்து வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலைப்பகுதி, முக்கியமான இயற்கை தளமான இந்த பகுதியினையும் ஆக்கிரமிக்க சீனா இரகசியமான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது.
இதன்நோக்கம் சாலைக்கு நேராக இருப்பது இந்தியாவின் வேதாரணியம் இந்தியாவினை கண்காணிப்பதற்காக சீனா தளத்தினை அமைப்பதற்கு இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
பாகிஸ்தான் தூதுவர் வருகை
பாகிஸ்தான், இலங்கை அரசாங்கத்திற்காக பல ஆயுத உதவிகளை செய்தது. பல்குளல் எறிகணை விமானங்கள் கனரக ஆயுதங்களை வழங்கி இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை மேற்கொள்வதற்கு மிக மோசமாக உதவிசெய்த நாடு பாகிஸ்தான்.
பாகிஸ்தான் நாடு பல தீவிரவாத அமைப்புக்களை இயக்கிவருகின்றார்கள். உலகத்தில் பல பயங்கரவாத தீவிரவாத செயற்பாடுகளுக்கு காரணமாக இருக்கின்றவர்கள்.
போர் நிறைவடைந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் தூதுவர் தமிழர் தாயகத்தினை பார்வையிட்டுள்ளார். பருத்தித்துறை துறைமுகத்தினையும் பார்வையிட்டுள்ளார்.
இந்த நோக்கம் என்பது தமிழ்மக்களின் நலன் சார்ந்த விடயமாக அமையாது இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். தமிழ்மக்களின் வளங்களை சுறண்டுவதும் எமது அயல் நாடான இந்தியாவினை கண்காணிப்பதும்தான் இவர்களின் நோக்கம் இந்த விடயத்தினை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த மண்ணுக்காக போராடி மரணித்த மாவீரர் நாளினை நினைவிற்கொள்கின்ற அமைதியான சூழ்நிலையில் தமிழ்மக்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த அந்நிய தேசத்தின் பிரதிநிதிகள் எமது மண்ணில் கால்மிதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இன்று நாங்கள் அரசியல் ரீதியான உரிமையினை வென்றெடுக்க தீர்க்கமான முடிவுகளுக்குள் வந்துள்ளோம்.
அதன் ஆரம்ப புள்ளியான 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அந்த தளத்தில் நின்றுகொண்டு அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு சமஷ்டி ஆட்சிமுறையினைநோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டுள்ளோம்.
இது தொடர்பில் அதிகாரமுள்ள தரப்புடன் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
இந்தியாவுடன் உடன்படிக்கை
நாங்கள் எமது அயல்நாடான இந்தியாவுடன் ஒரு உடன்படிக்கையினை செய்வதற்கான ஏற்பாட்டினை செய்துகொண்டிருக்கின்ற வேளையில் பாக்கிஸ்தானின் வருகை நல்ல விடயமல்ல.
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்போகின்றோம் என அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு வருமாறு அழைக்கின்றார்கள். அதே சூழலில் தமிழ்மக்களுக்கு எதிரான சக்திகளையும் தமிழர் பிரதேசத்தில் தங்கள் ஆக்கிரமிப்புக்கான அனுமதிகளை கொடுத்து அனுப்புகின்றார்கள்.
இந்த அரசாங்கத்தின் இரட்டை முகத்தினை நாங்கள் பாக்க வேண்டும். அரசியல்வாதிகள் தெளிவாக இருக்க வேண்டும். யாழ்.மாநாகரசபை மேஜர் பாகிஸ்தானின் தூதுவரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இச்சூழ்நிலையில் இது தேவைதானா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையாக இருக்கின்ற இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் ஒன்றித்துபோக வேண்டிய தேவை உள்ளது.
இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வருகை என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மாகாணசபை தேர்தல் நடத்த வேண்டும் என்று நாங்கள் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு சொல்லியுள்ளோம்.
ராஜீவ்காந்தி படுகொலை
எதிர்வரும் காலங்களில் இந்தியாவுடன் பேசவுள்ளோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தடையினை நீக்குவதற்காக இந்தியாவிடம் நாங்கள் கோரியுள்ளோம். எதிர்காலத்தில் இந்தியா அக்கறை செலுத்தி செயற்படும் என்பதை நாங்கள் நம்புகின்றோம்.
ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டது இந்திய அரசங்கத்தின் நல்லெண்ண நோக்கம் அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
செயல் ரீதியாக இந்தியா தமிழர்கள் தன்னுடைய நிலைப்பாட்டினை சொல்லி இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.
விடுதலைப்புலிகளாகிய நாங்கள் 35 ஆண்டுகளின் பின்னர் அண்மையில் இந்தியாவின் தலைநகருக்கு அழைக்கப்பட்டு சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். தமிழர்களின் பிரதிநிதிகளாக அங்கிகாரத்தினை இந்தியா வழங்கியுள்ளது.
அந்த அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான தடையினை இந்தியா நீக்கி தமிழ்மக்களுக்கான சுதந்திரம் உரிமையினை வென்றெடுக்க இந்திய அரசாங்கம் தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.